இடைத்தேர்தல்: அதிமுகவை ஆதரிக்க பாஜக விதித்த நிபந்தனை 5 மேயர் பதவி ப்ளஸ் 35% இடங்கள்..
சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தங்களை ஆதரிக்க பாஜக விதித்த நிபந்தனைகள் அதிமுகவை அதிரவைத்திருக்கிறதாம். உள்ளாட்சி தேர்தலில் 5 மேயர் பதவிகள், 35% இடங்கள் ஒதுக்கினால்தான் கூட்டணி தொடரும் என கறார் காட்டியதாம் பாஜக.
இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே நாங்குநேரிக்கு குறிவைத்தது பாஜக. அங்கு பொன்னார் அல்லது நயினார் நாகேந்திரன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதிமுக இதை ரசிக்காமல் 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்தது. இதனால் இடைத்தேர்தல்களில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுந்தது.
மேலும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை அதிமுக குழு நேரில் சந்தித்து ஆதரவும் கேட்டது. ஆனால் பாஜக தலைவர்களை அதிமுக குழு சந்திக்க இல்லை. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலா என்கிற பேச்சும் அடிபட்டது.
இதனிடையே திடீரென இன்று பாஜக தலைமையகம் சென்று அக்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். பாஜகவும் ஆதரவு தருவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, இருகட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எவ்வளவு இடம்தரும் என்பதை பொறுத்துதான் இடைத்தேர்தல் ஆதரவு முடிவு என கறாராக சொல்லிவிட்டோம். எங்கள் தரப்பில் 5 மேயர் போஸ்ட் 30 முதல் 35% இடங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தந்துதான் ஆக வேண்டும் என சொல்லப்பட்டது. இதன் பின்னரே முறையான அறிவிப்புகள் வந்திருக்கின்றன என்கின்றன என பூடகமாக சுட்டிக்காட்டுகின்றன.