ஊரடங்கு தளர்வு எதிரொலி.. சென்னையில் இன்று முதல் 200 அரசு பஸ்கள் இயக்கம்
சென்னை: 50% அளவுக்கான அரசு ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப உள்ளதால், சென்னை மாநகரில் 200 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இன்று முதல், நான்காவது கட்ட லாக்டவுன், நாடு முழுக்க துவங்கியுள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த லாக்டவுன் நீடிக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் முன்பைவிட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை மாநகரில் இன்று 200 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கணேசன் அறிவித்து உள்ளார். தலைமை செயலகத்துக்கு ஏற்கனவே உள்ள 25 பேருந்துகளுடன் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படும்.
இன்று முதல் லாக்டவுன் 4.0 அமலுக்கு வந்தது.. பேருந்து சேவைகளுக்கு அனுமதி.. ஆனால் மாநில அரசு கையில்!
சொந்த செலவு
தேவை ஏற்படும் பட்சத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசு ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு செல்லலாம் என்றாலும் அவர்கள் தங்கள் சொந்த செலவின் அடிப்படையில்தான் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பஸ்
இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் முதலாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, குறைக்கப்பட்ட பஸ் போக்குவரத்து சேவை, சென்னையில், முதன் முறையாக இன்று அதிகரித்துள்ளது. இதனால் சாலையில் இயங்கும் பஸ்களை மக்கள் ஆர்வத்தோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிற மாவட்டங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில், சுகாதார பணியாளர்கள், போலீசார் போன்றோர் பணிக்கு செல்வதற்காக மாவட்டம் முழுவதும் 11 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை இன்று முதல் பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க அறிவுறுத்தினால், அந்த பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொது போக்குவரத்துக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கூறுகிறார்கள்.
நெல்லை மாவட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வர வசதியாக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. நெல்லையிலிருந்து தென்காசி, பாபநாசம், சங்கரன்கோவில் மற்றும் ராதாபுரத்தில் இருந்து நெல்லைக்கும், பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில், சிவகிரி, சுரண்டை ஆகிய ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.