கொரோனா பாதிப்பு எப்படி... என்ன நடவடிக்கை எடுக்கறீங்க - கலெக்டர்களிடம் கேட்ட தமிழக முதல்வர்
லாக்டவுனை நீடிப்பதா? அல்லது முடிவுக்கு கொண்டுவரலாமா என்பது பற்றியும் மாநிலம் முழுவதும் கொரோனா நிலவரம், நிவாரணப்பணிகள் குறித்தும் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோனை மேற்கொண்
சென்னை: கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் லாக்டவுனை ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு நீடிக்கலாமா அல்லது முடிவுக்குக் கொண்டு வரலாமா என்பது பற்றியும் என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நாளை வியாழக்கிழமையன்று சுகாதாரத்துறை செயலாளர்களுடன் நடத்தும் முதல்வர் என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது பற்றி முடிவு செய்வார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 1.68 கோடி பேரை தொட்டுப்பார்த்துள்ளது. 1.04 கோடி பேர் குணமடைந்துள்ளனர் என்றாலும் தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியாவில் லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் கட்டுப்பட்டாலும் தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. தினசரியும் 7 ஆயிரம் பேர் வரை நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் ஆகஸ்ட் 2 வரை லாக்டவுன் அமலில் உள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிச்சாமி.
நாளைய தினம் சுகாதாரத்துறை செயலாளர்களின் ஆலோசனையையும் கேட்டறிகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த ஆலோசனையின் பேரில் முதல்வர் பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது. லாக்டவுன் 6.0 வரும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிகிறது.
13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்.. வெதர்மேன் ஹேப்பி
தற்போது பொது போக்குவரத்துக்கு வரும் 31ஆம் தேதி வரை தடை உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ பாஸ் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று குறைவாக இருந்தாலும் மாவட்டங்களிலும், கிராமங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் நடத்தும் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா அல்லது தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தவிர பிற பகுதிகளில் தளர்வுகள் இருக்குமா என்று தெரியவரும். மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே லாக்டவுன் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுபோல ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.