டாஸ்மாக்கை திறந்திடுவாங்கன்னு நினைச்சேன்.. ஆனா பெட்ரோல்ல கை வச்சுட்டாங்க... கஸ்தூரி டிவீட்
டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்புக்கு கஸ்தூரி நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "நான்கூட டாஸ்மாக்கை இப்போ திறந்துடுவாங்கன்னு நினைச்சு தப்பு கணக்கு போட்டுட்டேன்.. அரசுக்கு ரொம்ப நன்றி" என்று தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, "பெட்ரோல் டீசல் விலை கூடத்தான் செய்யும். இன்னும் அத்யாவசிய பொருட்கள் விலை ஏறத்தான் செய்யும்.. இன்னும் போக போக பொருளாதார ரீதியான பல சோதனைகளை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும்... உலகமே ஆடி போய் கிடக்கு... நாம மட்டும் எப்படி விதிவிலக்கா?" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி வருகிறது.. ஆங்காங்கே டிஸ்சார்ஜ்கள் நடந்தாலும், பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது. பச்சை கலர் எல்லாம் ஆரஞ்சு ஆகிறது.. ஆரஞ்சு எல்லாம் ரெட் கலருக்கு மாறுகிறது... தினம் தினம் தமிழகத்துக்கு கலக்கம் இருந்து வருகிறது.
இந்த சமயத்தில்தான் மாநில அரசும் புது புது அதிரடிகளை பிறப்பித்து வருகிறது.. ஏதாவது செய்து வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உழன்று வருகிறது.. அதில் ஒரு பகுதியாகத்தான் சில தளர்வுகள் செய்யப்பட்டன.. அந்த தளர்வுகளில் எப்படியும் கண்டிப்பாக டாஸ்மாக்கை திறந்துவிடுவார்களோ, பொருளாதாரத்தை ஈடுகட்ட இப்படி ஏதாவது அறிவிப்பு வந்துவிடுமோ என்று பயந்து கொண்டே இருந்தோம்.
அறிவிப்பு
நல்லவேளை, அப்படி ஒரு எண்ணமே அரசுக்கு இப்போதைக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எத்தனையோ பெண்களின் வயிற்றில் இந்த அறிவிப்பு பாலை வார்த்தது.. ஆனால் அதே சமயம் பெட்ரோல் விலையை உயர வைத்து மொத்தமாக ஒரு அதிர்ச்சியை தந்துவிட்டது மத்திய அரசு... ஏற்கனவே அவதியில் உள்ள மக்கள் இந்த அறிவிப்பினால் இன்னும் கடுப்பாகி உள்ளனர்.. அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நல்ல எண்ணம்
இதற்குதான் நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.. அதில், "டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி! "
நாராயணசாமி
"புதுச்சேரி முழுதும் green/ orange zone என்ற நிலையிலும், மது விற்பனை இல்லை என்ற முடிவெடுத்துள்ள
@VNarayanasami அவர்களுக்கு நன்றி. பொறுப்பான முடிவு. தமிழகத்திலிருந்து பலரும் காரைக்காலுக்கும் பாண்டிச்சேரிக்கும் படையெடுத்து தொற்று பரப்பும் அபாயத்தை முளையிலேயே கிள்ளி விட்டார்" என்று பதிவிட்டார். இதற்கு ட்விட்டர்வாசிகள், "பெட்ரோல் & டீசலுக்கு வரி ஏற்றியதற்கு பாராட்டு தெரிவித்து விட்டீர்களா?" என்று கேட்டனர்.
பெட்ரோல் விலை
அதற்கு கஸ்தூரி, "பெட்ரோல் டீசல் விலை கூடத்தான் செய்யும். இன்னும் அத்யாவசிய பொருட்கள் பலவும் விலையேற்றம் காணும். இன்னும் போக போக பொருளாதார ரீதியான பல சோதனைகளை நாம் சந்தித்து தான் ஆக வேண்டும். உலகமே ஆடி போய் கிடக்கு. நாம் எப்படி விதிவிலக்காக முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
விலைவாசி
இதற்கும் ஒருவர் "பெட்ரோல் & டீசல் விலை தானாக ஏறவில்லை. அது அரசால் ஏற்றப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து பல இடங்களில் இப்போது தான் தொழிலுக்காக பலர் வெளியே வர இருக்கின்றார்கள். இந்த விலையேற்றம் அவர்களை பாதிக்காதா? இதனால் விலைவாசி ஏறும் என்பது தெரியாதா? இதைத் தான் தாங்களும் விரும்புகிறீர்களா?" என்று கஸ்தூரியிடம் பதில் கேள்வி கேட்டார்.
பேருந்து சேவை
அதற்கு கஸ்தூரி, "விலையேற்றத்தை எப்படி யாரும் விரும்புவார்கள்? ஆனால் எல்லா ஏழைகளையும் நேரடியாக பாதிக்கும் மது மளிகை மருந்து போன்ற விஷயங்களில் தலையிடாமல் பெட்ரோல் வரியை ஏற்றியுள்ளது இருப்பதில் நல்ல யோசனை என்று நான் நினைக்கிறேன். பேருந்து சேவை தொடங்கியுள்ள இடங்களில் சமாளித்துவிடலாம்" என்று கூறியுள்ளார்.
குடிமகன்கள்
எனினும், "ஊரடங்கு முடிந்த பிறகு மதுபான கடைகளை திறப்பார்கள். அப்போது உங்களுடைய கருத்து என்னவாக இருக்கும் மேடம்?, கஸ்தூரி அக்கா, தமிழ்நாட்டு அரசாங்கம் டாஸ்மார்க்கு மூடினாலும், கள்ளச்சாராயம் காய்ச்சி ரகங்களை தடுக்க முடியவில்லையே,? உங்க பதிவை பார்த்தா, டாஸ்மாக் எப்படா திறப்பாங்கன்னு ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்த மாதிரியே தெரியுதே? உங்களுக்கு பிளாக் ல கிடைக்கும். நாங்க எங்க போவோம்?" என்று இதனால் குடிமகன்கள் சிலர் திரண்டு வந்து கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பி கொண்டு உள்ளனர்.