"சரக்கு தர்றீங்களா, சாகட்டுமா" கிணற்றில் குதித்து விடிய விடிய ரகளை செய்த மணவாளன்.. சென்னை அருகே!
கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்
சென்னை: "சரக்கு தர்றீங்களா, இல்லாட்டி சாகட்டுமா" என்று கேட்டு தொழிலாளி ஒருவர் கிணற்றுக்குள் குதித்து விட்டார்.. கிணற்றுக்குள் இருந்தபடியே விடிய விடிய அமர்க்களம் செய்த இவரை போலீசார் போராடி மீட்டனர்!
Recommended Video
சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் மணவாளன்.. 46 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி... மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். மணவாளனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இப்போது ஊரடங்கினால் டாஸ்மாக் கடைகள் மூடிவிடவும் மது கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் தண்ணி அடிக்காமல் அவரால் இருக்க முடியவில்லை.. அதனால், நேற்றிரவு வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றில் குதித்துவிட்டார. அந்த கிணறு 70 அடி ஆழம் உடையது.. கிணற்றில் தண்ணியும் குறைவாகவே இருந்தது.. உள்ளே குதித்த மணவாளன் தண்ணீரில் நின்றுகொண்டாரே தவிர மூழ்கவில்லை.
ஆனால் இவர் ஓடிப்போய் கிணற்றில் விழுந்ததை பார்த்ததும் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் சத்தம் போட்டனர்.. அதனால் டார்ச்லைட் எடுத்து கொண்டு ஓடிவந்து பார்த்தபோது கிணற்றினுள் மணவாளன் நின்று கொண்டிருந்தார். கயிறு கட்டி அவரை மேலே கொண்டு வர முயன்றனர்.. இதை பார்த்ததும் கோபமடைந்த மணவாளன், யாராவது என்னை காப்பாத்த வந்தால், கிணற்றுக்குள்ளேயே கழுத்தை அறுத்து கொள்வேன் என்றார்.
இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர், அவரை மேல வருமாறு கெஞ்சினார்கள்.. சரக்கு தந்தால்தான் மேலே வருவேன் என மணவாளன் பிடிவாதம் பிடிக்கவும், அதன்படியே வாங்கி தருவதாக உறுதி தந்தனர். பிறகு கயிறு கட்டி அவரை மேலே மீட்டு கொண்டு வந்தனர்.. உடனே "சரக்கு எங்கே" என்று கேட்டார் மணவாளன்.. "இப்போ கடைகள் இல்லையே.. வாங்க தர்றோம்" என்றனர்.
இதை கேட்டதும் டென்ஷன் ஆகிவிட்ட மணவாளன் திரும்பவும் கிணற்றுக்குள் குதித்துவிட்டார்.. அதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்ததையடுத்து, வீரர்கள் விரைந்து வந்து மணவாளனை மீட்க முயன்றனர். அவர்களையும் மணவாளன் மிரட்டவும், சமாதான பேச்சு ஆரம்பமானது.. கடைசியில் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டு மேல கொண்டு வந்தனர். விடிய விடிய நடந்த இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.