"பேனிக் பையிங்".. மாறி மாறி வரும் உத்தரவுகள்.. கடைகளில் குவிந்த கூட்டம்.. குழப்பத்தில் மக்கள்.. ஷாக்
அத்தியாவசிய கடைகள் இன்று திறக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
சென்னை: தினம் தினம் புது புது விதிகள்.. புது புது தளர்வுகள்.. புது புது உத்தரவுகள் என்று அறிவித்து மக்களை குழப்பி கொண்டுள்ளார்களா அல்லது மக்களுக்கு பிரச்சினையின் ஆழம் தெரியவில்லையா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.. இவ்வளவு நாள் அரும்பாடு பட்டு, மக்கள் அளித்த ஊரடங்கு ஒத்துழைப்பு இன்று ஒரே நாளில் காற்றில் பறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
5 மாநகராட்சிகள், சில மாவட்டங்களில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு நாளை முதல் அமலாகவுள்ளது. இதனால் மக்கள் இன்று காலை முதலே கடைகளில் குவிந்து விட்டனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
காரணம் மக்கள் குவிந்த இடங்களில் காணாமல் போன சமூக விலகல். இதையடுத்து அவசரம் அவசரமாக தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்தது. பொதுமக்களின் வசதிக்காக இன்று மட்டும் மளிகை உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனுமதி
பொருட்களை வாங்க செல்லும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியும் உள்ளது. ஆனால் இதை முதலிலேயே செய்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் மொட்டையாக நான்கு நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்ததால் மக்கள் பீதியாகி விட்டனர். மேலும் கோயம்பேடு மொத்த காய்கறிக் கடைகள் முதலில் திறக்காது என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அது நான்கு நாட்களும் திறந்திருக்கும் என்று புது உத்தரவு போட்டுள்ளனர்.
அனுமதி
பொருட்களை வாங்க செல்லும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியும் உள்ளது. ஆனால் இதை முதலிலேயே செய்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் மொட்டையாக நான்கு நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்ததால் மக்கள் பீதியாகி விட்டனர். மேலும் கோயம்பேடு மொத்த காய்கறிக் கடைகள் முதலில் திறக்காது என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அது நான்கு நாட்களும் திறந்திருக்கும் என்று புது உத்தரவு போட்டுள்ளனர்.
சென்னை
தமிழகத்திலேயே சென்னைதான் வைரஸில் முதலிடத்தில் உட்கார்ந்து மிரட்டி கொண்டிருக்கிறது.. அப்படி இருக்கும்போது, இப்படி ஒரே நாளில் அத்தனை பேரும் தெருவில் கூடியதால் மிகப் பெரிய அச்சுறுத்தலாக அது மாறியுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான உத்தரவு அவசியம்தான்.. பொதுமக்கள் நலன் கருதியே வெளியிட்டிருந்தாலும், இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செய்திருக்கலாம்.
கேரளா
கேரளாவில் டாப் டூ பாட்டம் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் டோர் டெலிவரி செய்யப்பட்டு வரும் நிலையில் கோயம்பேடை திறந்து வைத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. #Zomato நிறுவனத்துடன் சேர்ந்து அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கு சென்று கொடுக்கின்றோம் என்று சொன்ன அரசு, அதை ஏன் இன்னும் தெளிவாக செய்யவில்லை என்று தெரியவில்லை. இன்னும் மக்கள் எல்லாவற்றுக்கும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய நிலையில்தான் உள்ளனர்.
பதட்டம்
இதனால் கடைகளில் வரலாறு காணாத கூட்டம் நிறைந்து வழிகிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதால் இன்று காலை முதலே மக்கள் பதட்டமடைந்து தேவையான பொருட்களை வாங்க கோயம்பேட்டுக்கும், பிற கடைகளுக்கும் முந்தியடித்து கொண்டு ஓடியுள்ளனர். மாற்றி மாற்றி வரும் உத்தரவுகளால் மக்கள் பெரும் குழப்பத்துக்கும் ஆளாகி உள்ளனர்.. தொற்று அபாயம் அத்தனையும் அப்பாவி மக்கள் தலையில்தான் விடியப் போகிறது. ஏற்கனவே சென்னையில் அதிக அளவில் கொரோனா தாண்டவமாடுகிறது. இன்று கூடிய கூட்டத்தால் பேரபாயமாக அது மாறி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
ஊரடங்கு
மத்திய அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் மாநில அரசு வேறு உத்தரவுடன் வருகிறது. பிறகு மாவட்ட கலெக்டரின் உத்தரவு வருகிறது. நகராட்சி நிர்வாகங்களின் அறிவிப்பு தனி.. கடைசியில் மக்கள் பதட்டத்துடன் ஒவ்வொரு இடமாக அலைய வேண்டியுள்ளது. மக்களை பதட்டப்படுத்தாமல் தெளிவான முறையில் உத்தரவுகள் போடுவது, கட்டுப்படுத்துவது அவசரம் அவசியம்.... இல்லாவிட்டால் இத்தனை நாள் ஊரடங்கினால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மக்களின் செயலுக்கு ஒரு அர்த்தமும் இல்லாமல் போய்விடும்... இவ்வளவு நாள் கட்டிக்காத்தது எல்லாமே ஒரே நாளில் சிதைந்து சின்னாபின்னமாகிவிடும்.
விபரீதம்
மக்களும் விபரீதம் புரியாமல் கூட்டம் கூட்டமாக அலைகிறார்கள். மளிகை, காய்கறி, பால் போன்ற பொருட்களை வாங்கிக் கொள்ள சென்னையில் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர். சென்னையின் பல இடங்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இங்கெல்லாம் சமூக இடைவெளி சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. பலர் மாஸ்க்கே இல்லாமல் வந்துள்ளனர்.
முழு ஊரடங்கு
இதையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சுட்டிக் காட்டி ட்வீட் போட்டுள்ளார்.. ''பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது... நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்'' என கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது அரசும் நேரத்தை நீட்டித்துள்ளது.
பேனிக் பையிங்
சென்னையில் மக்கள் "பேனிக் பையிங்"கில் குதித்ததால் பெரும்பாலான கடைகளில் முட்டை, நூடுல்ஸ், பிரட் ஆகியவை கிடைக்கவில்லையாம்.. முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது... முட்டை 5.50 காசுகள் விற்கிறார்கள்.. ஆவின் பால் கிடைக்கவில்லையாம்.. ஆரோக்கியா, திருமலா மட்டுமே கிடைக்கிறது. பேக்கரிகளில் பிரட் விலை பாக்கெட்டுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விற்பனை விலையை அரசு கண்காணிக்க வேண்டும்.. இது சம்பந்தமாக வியாபாரிகள் சங்கங்களும் நேரடியாக களத்தில் குதித்து கண்டிப்பு காட்டலாம்.
அபாயம்
4 நாட்கள் முழு ஊரடங்கு என்று அதற்கு முந்தின தினம் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் அடைத்த பிறகு அறிவிப்பு விடுத்தால் கூட்டம் அதிகரிக்கத் தானே செய்யும்.. அதுமட்டுமல்ல பெருகிவரும் தொற்று எண்ணிக்கையில் வெறும் 4 நாட்கள் முழு ஊரடங்கு எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்படுகிறது என்றும் விளங்கவில்லை. 144 போட்டு ஒரு மாதமான பின்னரும் கூட தினம் ஒரு புதுசட்டம்.. புது புது விதிகள்.. புது புது தளர்வுகள்.. என்று மக்களை குழப்பி கொண்டிருப்பதை தயவுசெய்து உடனடியாக தடுக்க வேண்டும்.. இவ்வளவு நாள் மக்கள் அளித்த ஊரடங்கு ஒத்துழைப்புக்கு கொஞ்சமாவது பலன் கிடைக்க வேண்டும்.. அபாயத்தை புரிந்து உடனடி நடவடிக்கை எடுக்குமா அரசு!!!