ஜெயஸ்ரீயை மூச்சு திணற வைத்து.. கொளுத்தி கொன்ற கயவர்களுக்கு கடும் தண்டனை தேவை: ஸ்டாலின் காட்டம்
விழுப்புரம் சிறுமி மரணத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "ஜெயஸ்ரீயின் கை - கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சு திணறவைத்து.. தீ வைத்து கொளுத்திய அதிமுக பிரமுகர்கள் கலியபெருமாள் முருகன் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்.. குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீகள் போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் விழுப்புரம் சிறுமியின் கொடூர மரணம் குறித்து தன் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது சிறுமதுரை கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ஜெயபால்.. இவரது மகள் ஜெயஸ்ரீ.. 15 வயதாகிறது.. 10 வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் இருந்து புகை வந்துள்ளது.. இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயஸ்ரீ உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்துகொண்டிருந்தது.
ஷாக்.. "வாயில் துணி வைத்து.. கை, காலை கட்டிப்போட்டு எரிச்சிட்டாங்க".. வாக்குமூலம் தந்த சிறுமி மரணம்
ஜெயஸ்ரீ
நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீயை மீட்ட அவர்கள், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்... தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டது. அதற்குள் தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.. ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணையும் நடத்தினர்.
அதிமுக பிரமுகர்கள்
அப்போது, வீட்டில் தனியாக இருந்த தன்னை முருகன், கலியபெருமாள் 2 பேரும் வாயில் துணியை அடைத்து, கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றதாக சொன்னார்.. ஜெயஸ்ரீ சொன்ன வாக்குமூலத்தை விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமார் பதிவு செய்து கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன், கலியபெருமாளை போலீசார் கைது செய்தனர். இதனிடையே 95 சதவீதம் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாக்குமூலம்
சிறுமி வாக்குமூலத்தில் தெரிவித்த முருகன் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் என தெரிகிறது.. முன்னாள் கவுன்சிலராகவும் இருந்துள்ளாராம்.. அதேபோல கலியபெருமாள் என்பவர் அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் என்பதால் இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.. முன்விரோதம் காரணமாக இது நடந்திருப்பினும், கொலை செய்தது அதிமுக பிரமுகர்கள் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டும் வருகிறது.
முக ஸ்டாலின்
அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் இதே கோரிக்கையை சற்று காட்டமாகவே தன்னுடைய அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.. அவர் தெரிவித்துள்ளதாவது: "விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து; கலியபெருமாளும் முருகனும் சிறுமியை தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது.
துடிதுடிக்கவே செய்யும்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயஸ்ரீ, நீதித்துறை நடுவரிடம் இதுகுறித்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 95% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்கவே செய்யும்.. கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தை தருமபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கருக்கி, கதறக் கதறக் கொன்றதற்கு காரணமானவர்கள் அதிமுகவினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.
உச்சபட்ச தண்டனை
சிறுமியை இழந்து வாடும் ஜெயபால் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அதேவேளையில், குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீகள் போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்கு செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும். விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.