"உங்களால் முடியும் ஐயா.. எவ்வளவோ பண்ணிட்டோம்.. சரிதானே".. ராமதாஸை இடித்துரைக்கும் திமுக எம்பி
டாக்டர் ராமதாசுக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதில் ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "உங்களால் முடியும் ஐயா.. உங்களால் முடியும். எவ்வளவோ பண்ணிட்டோம், இது பண்ண மாட்டோமா. சரி தானே ஐயா" என்று டாக்டர் ராமதாஸின் மதுக்கடைகள் மூட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு திமுக எம்பி செந்தில்குமார் இடித்துரைத்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவுக்கு சில தளர்வுகளை மாநில அரசு அளித்துள்ளது.. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்க குறிப்பிட்ட கால நேர அனுமதி தரப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகத்தில் இன்று முதல் அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் சென்னையில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு மட்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Memes: அய்யய்யோ.. மிலிட்டரிக்கு ஆள் எடுக்கறாங்கன்னுல்ல நெனச்சேன்.. அம்புட்டும் டாஸ்மாக் கூட்டமா?
போராட்டம்
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவே கூடாது என்று பாமக வலியுறுத்தியபடியே உள்ளது.. மதுவிலக்கினை முன் வைத்து போராடி வரும் கட்சி பாமக.. இப்போது தன் கொள்கையில் மேலும் தீவிரத்தை காட்டி வருகிறது.. மூடிய மதுக்கடைகள் மூடியதாகவே இருக்கட்டும்.. தயவு செய்து திறக்க வேண்டாம் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டு கொண்டிருந்தார்.
வீதிகள்
மேலும் ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் ஏற்கனவே கரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்துத் தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
செந்தில்குமார்
இந்த கேள்விக்கு திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் பதிலளித்துள்ளார்... செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "உங்களால் முடியும் ஐயா.. உங்களால் முடியும். எவ்வளவோ பண்ணிட்டோம், இது பண்ண மாட்டோமா. சரி தானே ஐயா" என்று குறிப்பிட்டுள்ளார். எம்பியின் இந்த ட்வீட்டுக்கு ஒருவர், "NDAல இருந்து வெளியேறி, அன்புமணி எம்பி பதவிய ராஜினாமா பண்ணி எதிர்ப்பு தெரிவிப்பார் waiting" என்று பதிவிட்டிருந்தார். அதற்கு செந்தில்குமார், "வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை" என்று பதிலளித்துள்ளார்.
வைரல் ட்வீட்கள்
இதற்கு மற்றொருவரோ, "ஆண்ட கட்சி, ஆளும் கட்சி ,கூட்டணி கட்சி எல்லாரும் மதுக்கடை விஷயத்துல மக்களை தான் ஏமாத்துறீங்க.. மத்ததை உங்க மனசாட்சிக்கே விட்டுடுறேன்" என்று பொதுவான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்டும், அதற்கு செந்தில்குமார் பதிவிட்ட பதில் ட்வீட்டும் படுவைரலாகி வருகிறது.