விளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்!
விளக்கு ஏற்றினால் கொரோனா ஒழியும் என புரளிகள் வெளிவருகின்றன
சென்னை: விளக்கு ஏற்றும் விஷயத்தை நாசா வரைக்கும் கொண்டு போய் முடிச்சு போட்டு விட்டனர் நம் மக்கள்.. விளக்கை ஏற்றும்போது அதில் வெப்பம் உண்டாகும்.. அந்த வெப்பத்தில் கொரோனா செத்துபோகும் சாகும் என ஐஐடி பேராசிரியர் ஒருவர் சொல்லிவிட்டதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டு வருகின்றனர்! இது பொய்ச் செய்தியாகும்.
Recommended Video
கொரோனாவைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த ஊரடங்கின் 10-வது நாளான நேற்று பிரதமர் மோடி, ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார்.
அதில், கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றுபட்டு, ஊரடங்கை கடைப்பிடித்து வருகிற நாட்டு மக்களுக்கு நன்றியை சொன்னார்.. பிறகு, கொரோனா வைரஸுக்கு எதிராக நாம் யாரும் தனியாக இல்லை என்பதை காட்டும் வகையிலும், நாட்டின் 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டுள்ளோம் என்ற பலத்தை தெரிவிக்கும் வகையிலும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள், வீட்டின் 4 மூலைகளிலும் அகல் விளக்கு அல்லது டார்ச் விளக்கு அல்லது செல்போன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவோம்" என அழைப்பு விடுத்தார்.
சுருக்கமாக சொல்லபோனால், இந்தியர்களின் ஒற்றுமையை பறைசாற்றம் வகையில் பிரதமர் மோடி விளக்கை ஏற்ற சொல்லி உள்ளார்.. ஆனால் அவர் எந்த நோக்கத்திற்காக இதை சொன்னாரோ அது வேறு மாதிரியாக திரிக்கப்பட்ட வருகிறது.. தப்பான தகவல் என்பதுடன், அவதூறாகவும் சித்தரிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது...
குறிப்பாக சோஷியல் மீடியாவில்தான் இப்படிப்பட்ட போலி தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.. விளக்கேற்றினால் கொரோனா செத்துவிடுமா? இருட்டில் கொரோனா ஓடிவிடுமா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.. ஆனால் உண்மையிலேயே விளக்கேற்றினால் கொரோனாவை கொல்லலாம் என்று பிரதமர் சொல்லவே இல்லை.. ஆனால் அப்படி சொன்னது போலவே மீம்ஸ்களும் உலா வருகின்றன.
இதில் உச்சக்கட்டமாக சில விஷமிகள் ஐஐடியை கொண்டு வந்து இதில் கோர்த்துவிட்டுள்ளனர்.. "விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்றினால் வெப்பம் அதிகரிக்கும்... இதனை ஐஐடி பேராசிரியர் ஒருவரே சொல்லியுள்ளார்.." என்ற தகவலும் பரபரப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ்கள் வெப்பமான வெப்பநிலையில் உயிர் வாழாது... 130 மெழுகுவர்த்திகள் ஒன்றாக எரிந்தால், வெப்பநிலை 9 வீழ்ச்சியால் அதிகரிக்கும் என்று ஐஐடி பேராசிரியர் சொல்கிறார், அதனால் கொரோனா ஞாயிற்றுக்கிழமை இரவு 9.09 மணிக்கு இறந்துவிடும்" என்ற தகவலும் கிளப்பப்பட்டு வருகிறது.
ஆனால் இதெல்லாம் அப்பட்டமான பொய்.... வதந்தியே என்று மக்கள் தெளிவாக வேண்டும். இதுபோன்ற பொய்ச் செய்திகளை மக்கள் நம்பக் கூடாது.