தமிழகத்தில் புது ரூல்ஸ்.. வந்தாச்சு கெடுபிடி.. பிற மாநிலங்களிலிருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. முழு ஊரடங்கு என்று இதை அழைக்க முடியாது. ஆனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
அதேநேரம், மக்கள் நிம்மதி பெருமூச்சு அடையும் விதமாக, மாவட்டங்கள் இடையே பயணிக்க இ பாஸ் தேவை என்று தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஆனால் வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வருவோருக்கு இ பாஸ் அவசியமாகும்.
இதோ தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் என்ன கூறியுள்ளது என்பதை பாருங்கள்.
தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முகக் கவசம்
மேலும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் முறையாகப் பின்பற்றத் தவறுவதாலும் சமீப காலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக 28.3.2021 அன்று, 13,070 நபர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 07.04.2021 அன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27,743 ஆக உயர்ந்துள்ளது.
பரிசோதனைகள்
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த 5.4.2021 அன்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கியமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆய்வு நடத்தி உரிய தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்தவும், RTPCR சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்தவும் அறிவுரைகள் வழங்கியதை அடுத்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 80,000 RTPCR என பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
விமானங்களுக்கு தடை
மத்திய - உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இது தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளான Containment Zones பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் எந்தவிதமான கடைபிடிக்கப்படும் தளர்வுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.
திருவிழாக்கள்
நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் - சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது. 10.4.2021 முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
காய்ச்சல் சோதனை
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை (Thermal scanning) பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் (Hand sanitizer) உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும் முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது.
தடுப்பூசி
ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிருவாகம் செய்ய வேண்டும் மேலும், நிலையான நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பஸ்களில் நின்று பயணிக்க முடியாது
பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
கடைகள்
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் (shopping malls), அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) (big format stores) ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
உணவகங்கள்
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11.00 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும், உணவகங்களில் இரவு 11.00 மணி வரை பார்சல் சேவை
அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இ பாஸ் தேவையில்லை
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவர கண்காணிப்பு பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால், மாவட்டங்கள் இடையே போக்குவரத்திற்கும் இ பாஸ் தேவையில்லை. இது பயணிகளுக்கு சற்று மகிழ்ச்சியான தகவல்தான். அதே நேரம் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.