தமிழகத்தில் புதிய இ - பாஸ் தளர்வு.. மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் தேவையில்லை.. முழு விபரம்!
சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 3949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை தொடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டவுன் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் முழு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகளுக்கு அனுமதி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் இவையெல்லாம் இயங்கும்!
இபாஸ் எப்படி
இனி மாவட்டங்களுக்கு உள்ளே இ பாஸ் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்படும். அதாவது ஒரு மாவட்டத்திற்கு உள்ளே இருக்கும் இரண்டு நகரங்களுக்கு இடையே செல்ல இ பாஸ் தேவையில்லை. மற்ற செயல்பாடுகள் அனைத்திற்கும் எப்போதும் போல் இ பாஸ் அவசியம். அதாவது மாவட்டங்களுக்கு வெளியே செல்ல இ பாஸ் அவசியம்.
புதிய கட்டுப்பாடு
அதேபோல் மாநிலத்தில் இருந்து வெளியே செல்ல இ பாஸ் அவசியம். மேலும் மாநிலத்திற்கு உள்ளே வெளி மாநிலத்தில் இருந்து வர இ பாஸ் அவசியம் . முழு ஊரடங்கு இருக்கும் இடங்களில் 30.06.2020 வரை வழங்கப்பட்ட இ - பாஸ் 05.07.2020 வரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ பாஸ் பேர் தேவையில்லை .
என்ன விதி
ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு அரசு பணிக்கான ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கும், அப்பணியை மேற்பார்வை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இந்த பணிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளை சந்திக்கும் நபர்களுக்கும் இ பாஸ் வழங்கப்டும். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படும்.
பேருந்து போக்குவரத்து
இன்னொரு பக்கம் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து மொத்தமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் இந்த லாக்டவுன் பொருத்தம்.