தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50 சதவீத பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் 5-ஆவது கட்டமாக லாக்டவுன் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அனைத்தும் இயங்கும் அளவிற்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது.
எனினும் மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கேற்ப தளர்வுகளை கொடுப்பதா, கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழக அரசு இன்று புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பஸ் போக்குவரத்திற்காக தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்தது அரசு.. என்னென்ன தளர்வுகள்?
ஊரடங்கு உத்தரவு
அதன்படி தமிழகத்தில் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. நாளை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தவிர மற்ற பகுதிகளில் 50% பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் எந்த புதிய தளர்வுகளும் இல்லை. போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை காய்கறி கடைகள், உணவகங்கள்(பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். ஜூன் 8ஆம் தேதி முதல் தேனீர் கடைகள், ஹோட்டல்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைகள் நீடிப்பு
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறுஉத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:
- வழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிப்பு!
- நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
- தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும் மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
- வணிக வளாகங்கள்
- பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும் இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன் அதனை ஊக்கப்படுத்தலாம்.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
- மெட்ரோ ரயில் அல்லது மின்சார ரயில்
- திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
- அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
- மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து
இறுதி ஊர்வலங்கள்
மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
- இறுதி ஊர்வலங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள்
- இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
- திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.