தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? வரும் 30ம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களோடு வரும் 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் சுமார் 6500க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதியாகி வருகிறது. நேற்று மட்டும் 6993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உச்சம் அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தினமும் 100க்கும் அதிகமாக உள்ளது.
தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அப்படி உள்ள சூழலிலும் தொற்று அதிகமாக உள்ளது. பொதுபோக்குவரத்துக்கு கடந்த ஒரு மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இனியும் ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்று கூறியிருந்தார்.
எனவே ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களோடு வரும் 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கு தளர்வு.. எதெல்லாம் செயல்படலாம்? தொழில் வர்த்தக சபை பரிந்துரை.. லிஸ்ட் இதோ
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்க அரசு முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. பொதுபோக்குவரத்துக்கு தடை தொடர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் மருத்துவ நிபுணர்களுடன் வரும் 30ம் தேதி ஆலோசனை நடத்திய பின்னரே இதுபற்றி உறுதியான தகவல்கள் வெளியாகும்.