"என் மனைவி சாப்பிடலை.. கையில் காசும் இல்லை.. யாரும் உதவலை".. 150 கிலோமீட்டர் நடந்தே போன பண்டி!
இடம்பெயர்ந்து நடந்தே சென்றனர் தொழிலாளர்கள்
சென்னை: "என்னை விடுங்க.. என் மனைவி என்ன சாப்பிடுவாள் சொல்லுங்க.. கையில் காசு இல்லை.. வழியெல்லாம் கற்கள்.. கல்லையா சாப்பிடறது? சப்பாத்தியும், அதுக்கு தொட்டுக்கொள்ள உப்பும் கிடைச்சாலே போதும்னு ஆயிடுச்சு.. அதுகூடு எங்களுக்கு கிடைக்கல.. அதான் நடக்க ஆரம்பிச்சோம்" என்று வேதனையுடன் சொல்கிறார் பண்டி என்பவர்!!!
Recommended Video
நம் நாட்டில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.. இதனால் ஒருநாள் ஊரடங்கு, 144 தடை உத்தரவு என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.
மிக மிக முக்கியமான, அவசியமான அறிவிப்பு என்றாலும், இதை திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி.. அவர் அறிவித்த சில மணி நேரத்திலேயே லாக்டவுன் கொண்டு வரப்பட்டது.
கொரோனா விபரீதம்: ஏன்... எதற்கு... எப்படி? சட்டம் பேசுன தம்பிக்கு போலீஸ் தந்த பதில்- வைரல் வீடியோ
முன்னேற்பாடுகள்
இதனால் பொதுமக்கள் திணறிவிட்டனர்.. யாராலும் எங்கேயும் பயணிக்க முடியவில்லை... முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள முடியவில்லை.. 21 நாட்கள் அவரவர் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும், வெளியே நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதே தவிர, வீடில்லாதவர்கள் நிலை பற்றி யோசிக்கவில்லை.
மாநிலம்
அதேபோல, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்து தங்கி வேலை பார்த்து வருபவர்களாலும் திடீரென சொந்த ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.. கொஞ்சம் தொலைவான துரத்தில் இருப்பவர்களாக இருந்தால் பரவாயில்லை, ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.
நடந்தே வந்தனர்
இப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபுர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் நாக்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.. உடனே ஊர் திரும்ப வேண்டியிருந்ததால், சுமார் 135 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து கிராமத்தை அடைந்துள்ளார்.. வழியில் சாப்பிடவும் கடைகள் இல்லை.. இவரை போலவே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பீதியில் பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
கூலி வேலைகள்
அதேபோல, பீகார் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் டெல்லி பதேபூர் பெர்ரி பகுதியில் தங்கி கூலி வேலைகள் செய்து வருகின்றனர்... இவர்கள் இங்கேயே குடும்பமாக வசித்து வருபவர்கள்தான்.. ஆனால் கட்டுமான வேலை பார்ப்பவர்கள்.. வேலைவாய்ப்புகளை தற்சமயம் இழந்துள்ளதால், ஊருக்கும் செல்ல முடியாமல், வேலையும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவில் சிக்கி தவித்து வருகின்றனர். "நாங்க சாப்பிட்டு 2 நாளாச்சு.. எங்க குழந்தைகளுக்கும் சாப்பாடு இல்லை.. வெறும் தண்ணிதான் குடிக்கிறாங்க.. வீட்டு வாடகையும் தராததால், எங்களை ஹவுஸ் ஓனர்கள் காலி பண்ண சொல்றாங்க.. எங்கே போறதுன்னு தெரியல" என்று கண்ணீர்மல்க கூறுகிறார்கள்.
கூலித்தொழில்
ஊரடங்கு உத்தரவு என்பதால் ரயில், பஸ் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால் இவர்களின் பாதிப்பும், சிரமமும் ஏராளமானவை... இப்படித்தான் டெல்லியில் கூலித்தொழில் செய்து வந்தவர் பண்டி.. இவர் உபியை சேர்ந்தவர்.. கூலித்தொழில் என்பதால் தொடர்ந்து டெல்லியில் இருக்க முடியாத நிலை.. குடும்பத்தில் மொத்தம் 5 பேர் உள்ளனர்.. இதில் 3 குழந்தைகள்.. ஒரு குழந்தை பிறந்து 10 மாதம்தான் ஆகிறது.. வேறு வழியில்லாமல் இவர்கள் குடும்பமாக நடந்தே டெல்லியில் இருந்து உபியில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். இதற்கு 2 நாட்கள் ஆகியுள்ளனர்.. 10 மாதக்குழந்தையை பண்டிதோளில் சுமந்துகொண்டு நடந்தார்.. கிட்டத்தட்ட 150கிமீ தூரம் சொந்த ஊருக்கு இவர்கள் நடந்தே சென்றுள்ளனர்.
காசு இல்லை
"கையிலும் காசு இல்லை.. குழந்தைகளுக்கும் சாப்பாடு இல்லை.. ரொம்ப கஷ்டப்பட்டுதான் 2 நாளும் நடந்துள்ளனர்.. எதை சாப்பிடறது சொல்லுங்க? என்னை விடுங்க..என் மனைவி என்ன சாப்பிடுவாள்? வழியெல்லாம் கற்கள்.. கல்லை சாப்பிட முடியுமா? டெல்லியில் யாருமே உதவிக்கு வரல.. இப்போதைக்கு சப்பாத்தியும், அதுக்கு தொட்டுக்கொள்ள உப்பும் கிடைச்சாலே போதும்.. அதுகூட எங்களுக்கு டெல்லியில் கிடைக்கல.. அதான் சொந்த ஊருக்கு நடந்தே வரலாம்னு முடிவு பண்ணிடோம்" என்றார் வேதனையுடன்!!
அமைப்பு சாரா தொழிலாளர்கள்
உண்மையிலேயே அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு எப்படி வங்கி கணக்கில் நிவாரணம் அளிக்கும் என்பதும் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது... அமைப்புசாரா தொழிலாளர்கள் நிலைகுறித்துதான் கமல்ஹாசனும் கேள்வி எழுப்பியிருந்தார்.. அமைப்புசாரா மக்களின் வாழ்வாதாரம் முடங்கி உள்ளதால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.. எனினும் ஏழை மக்களின் நலனில் மத்திய அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்... இல்லையென்றால் வைரஸுக்கு பலியாகும் எண்ணிக்கையைவிட பசியால் உயிரைவிடும் எண்ணிக்கை அதிகமாகும் என்ற சூழலே உருவாகும்!