ஊரடங்கு தளர்வுக்கு பிறகுதான் பிரச்சினை அதிகம்.. புலம்பும் கடைக்காரர்கள், வணிகர்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை: ஊரடங்கு உத்தரவை தளர்த்தி, அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகளையும் திறப்பதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், இந்த அனுமதி என்பது கடைக்காரர்களுக்கு மேலும் கூடுதல் பிரச்சினையைத்தான் ஏற்படுத்தியுள்ளதே தவிர, அவர்களின் வாழ்க்கை மேம்பட்டதாக தெரியவில்லை.
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி சிவப்பு மண்டல பகுதிகளில் கூட, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
ஒரு பக்கம் வைரஸ் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கடைகளை திறந்து வைத்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலை நிலவுகிறது.
கோயம்பேடு உணவு தானிய சந்தை மூடல்.. தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
அச்சத்தில் மக்கள்
மக்கள் ஒவ்வொருவருமே தெனாலி திரைப்படத்தில் வரக்கூடிய கமல்ஹாசனின் கதாபாத்திரம் போல எல்லாவற்றையும் பார்த்து பயப்பட கூடிய ஒரு சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். டீக்கடை திறந்திருந்தாலும் டீ குடிக்க பயம்.. பால் வாங்கி வீட்டில் காபி, டீ போட்டுக் கொள்ளலாம் என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது. உணவகங்கள் திறந்து இருந்தாலும் அது பல பேர் கைபட்ட உணவாக இருக்கக்கூடும்.. நமக்கு எதற்கு ரிஸ்க் என்று நினைத்து வீட்டிலேயே பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்கள்.
காய்கறி, மளிகை
எனவே, காய்கறி, மளிகை, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகளில் மட்டும்தான் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற கடைகளில் மிக அவசரம் என்றால் மட்டும் தான் மக்கள் செல்கிறார்கள். ஒரு மாத காலத்திற்கு மேலாக வீட்டுக்குள்ளேயே ஊரடங்கு வாழ்க்கையை வாழ்ந்த மக்களுக்கு, இப்போது அது பழகி போய்விட்டது. எனவே பிற கடைகள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறார்கள்.
விசாரித்து பாருங்கள்
கடைகளை திறந்து வைத்திருக்க கூடிய வியாபாரிகளும், இதன் காரணமாக புதிதாக பொருட்களை கொள்முதல் செய்வதை தவிர்க்கிறார்கள். உதாரணத்திற்கு, நீங்கள் நகரில் எந்த ஒரு இடத்திற்கும் சென்று ஃபேன்சி ஸ்டோர் கடைகளில் கேரம் போர்டு பவுடர் கிடைக்குமா என்று கேட்டுப்பாருங்கள். ஸ்டாக் இல்லை என்பார்கள். ஸ்டாக் இருக்கும் கடைகளிலும் அதிக விலைக்கு விற்பார்கள். முன்பு ரூ.30 என்று இருந்த பவுடர் இப்போது ரூ.50 என்பார்கள். ஏனெனில், இருப்பதை விற்று தீர்த்தால் போதும், அதுவும் முடிந்த அளவுக்கு அதிக விலைக்கு என்ற மனநிலையில்தான் கணிசமான வணிகர்கள் உள்ளனர்.
ஸ்டாக்
புதிதாக ஸ்டாக் வாங்கி வைக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறார்கள். இது ஒரு உதாரணம்தான். பல கடைகளும் அப்படித்தான் இருக்கிறது. பல நிறுவனங்களும் இருக்கிற இருப்பை எப்படியாவது வெளியேற்றி விட்டால் போதும் புதிதாக வாங்கி வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறார்கள்.
கூடுதல் சுமை
ஒரு பக்கம் கடைகள் மூடி இருந்தால், அதை சொல்லி கடை உரிமையாளர்களுக்கு வாடகை தராமல் தட்டிக் கழித்து விட முடியும். ஆனால் கடையை திறந்து வைத்து விட்டு வாடகை தராமல் இருப்பது என்பது இயலாத காரியம். எனவே கடைக்காரர்கள் மற்றும் வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது லாக்டவுன் தளர்வு. ஒரு பக்கம் லாக்டவுன் தளர்வால், கொரோனா பரவும் வாய்ப்பு ஜாஸ்தியாகிறது.
Recommended Video
கடைகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் கடைகளுக்கு செல்ல யோசிக்கிறார்கள். இந்த பாதிப்பு முழுமையாக சரி செய்யப்படும் வரை அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர்த்து பிற கடைகளில் கூட்டம் இருக்காது. எனவே 20% சில்லறை வணிகக் கடைகள் வருங்காலத்தில் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் இதுபற்றி கூறுகையில், நிதிப்பற்றாக்குறை காரணமாக ஊரடங்கு தளர்வு பிறகும் 20% அளவுக்கான சில்லறை வணிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் தங்கள் தொழிலை மூடிவிட்டு சென்றால், அவர்களுடன் பொருள் சப்ளைக்கான வணிகத் தொடர்பு கொண்டுள்ள வணிகர்கள் 10% பெயர் பாதிக்கப்பட்டவர்கள். ஆக மொத்தம் எஞ்சிய 70 சதவீதம் கடைகள்தான் இயங்கும். இதுதான் நாட்டின் நிலைமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.