வீட்டு முன்பு பதாகை ஏந்துதல்.. ஆன்லைன் அரசியல் வகுப்புகள்.. லாக்டவுன் தந்த புதிய சிந்தனைகள்!
சென்னை: கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் அரசியல் இயக்கங்கள், கட்சிகளிடையே புதிய ஒரு பாதையை திறந்துவிட்டிருக்கிறது. .ஆம் ஆன்லைன் மூலமாக அரசியல் வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம் நடத்துகின்றன இந்த கட்சிகளும் இயக்கங்களும்.. இவ்வளவு ஏன் ஆன்லைன் மூலமே எதிர்ப்புகளையும் கூட பதிவு செய்தும் வருகின்றனர்.
லாக்டவுன் என்பது இந்திய சமூகம் இதுவரை எதிர்கொண்டிராத ஒரு புதிய அனுபவம். அதுவும் ஒரு நோய்தொற்றுக்காக 40 நாட்கள் பொது முடக்கம் என்பது புரியாத புதிராகத்தான் தொடங்கியது.
ஆனால் இந்த லாக்டவுன் காலத்தையும் ஆரோக்கியமாக பயன்படுத்தலாம் என்பதை இணையவெளி கைபிடித்து வழிகாட்டியது. பொதுமக்களுக்குத்தான் என்று இல்லை அரசியல் கட்சிகள், இயக்கங்களுக்கும் கூட இந்த லாக்டவுன் புதிய பாதையை திறந்து காட்டியிருக்கிறது.
கொரோனா படுத்தும்பாடு... மத்திய பிரதேச மாநில பால்காரர்களின் பலே ஐடியா
உடனடி ஆன்லைன் கருத்தரங்கம்
பொதுவாக இயக்கங்கள், அரங்க கூட்டங்களை ஏற்பாடு செய்வது என்பதே ஒரு செயல்பாடாக இருக்கும். பேச்சாளர்கள் தேர்வு, காவல்துறை அனுமதி பெறுவது, சுவரொட்டி ஒட்டுவது என நீளும் இந்த பணி. ஆனால் லாக்டவுன் என்ன செய்துவிட்டது தெரியுமா? ஆன்லைன் கருத்தரங்குகளை அதாவது இன்ஸ்டண்ட் உணவுகளைப் போல நினைத்த உடன் கருத்தரங்கு, விவாத களம் ஆகியவற்றை நடத்த வழிவகுத்திருக்கிறது.
ஆன்லை வகுப்புகள்
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இளம் தலைமுறையினருக்கு அரசியல் வரலாற்றை கற்றுத்தர வாராந்திர ஆன்லைன் அரசியல் வகுப்புகளை நடத்துகின்றன. ஒரு தலைப்பின் கீழ் கலந்துரையாடல்களை நடத்துகின்றன. அறிவுப்பூர்வமான விவாத களத்துக்கான காலமான லாக்டவுன் உருமாறி இருக்கிறது.
லாக்டவுன் கால எதிர்ப்புகள்
லாக்டவுன் காலத்தில் எதிர்ப்புகளை எப்படி பதிவு செய்வது? இதுவும்சாத்தியம்தான் என கற்றுத்தந்துள்ளது. வீடுகளின் முன்பு கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளை குடும்பத்துடன் ஏந்தி நிற்பது, அதை சமூக வலைதளங்களில் லைவ்வாக ஒளிபரப்புவது, ஆன்லைனில் கருத்தரங்கம் நடத்துவது போல அனைவரையும் ஒருங்கிணைத்து ஆன்லைனிலேயே போராட்ட முழக்கங்களை எழுப்புவது என அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
லாக்டவுன் கால பாதை
அனைவருமே ஆன்லைன்வாசிகளாக வாழும் இந்த காலத்தில் இப்படியான ஒருங்கிணைப்புகள்- விவாதங்கள் மிக எளிதாகிவிடுகிறது. இதனால் தமிழகத்தில் தத்துவார்த்த அரசியல் பேசும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் இந்த புதிய பாதையையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு ஓய்வின்றி தொடர்ந்து பயணிக்கின்றன. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது நிதர்சனம்.. இதனைத்தான் லாக்டவுன் எனும் பொதுமுடக்கம் படிப்பினையாக நமக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கிறது.