அமித்ஷா எங்கே.. சூடுபறக்கும் வடஇந்திய தொழிலாளர் பிரச்சினை.. டிவிட்டரில் வைரலாகும் #WhereIsAmitShah
அமித்ஷா எங்கே என்று ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகிறது
சென்னை: கொரோனாவைரஸ் நாட்டையே கதி கலங்க வைத்து வரும் நிலையில், "அமித்ஷா எங்கே"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
ஷாகின் பாக்-கில் நடந்த தொடர் போராட்டங்களின்போதும் சரி, டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலானது வகுப்பு கலவரமாக மாறி 40 உயிரை காவு வாங்கியபோதும் சரி.. அமித்ஷா அமைதி காத்தது சர்ச்சைக்குள்ளானது.
டெல்லியில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் ஒரு பக்கம் கொதித்தது.. ''டெல்லி தேர்தல் நடந்தபோது, பிரச்சாரத்துக்காக மட்டும் ரொம்ப நேரம் ஒதுக்கிய அமித்ஷா, வகுப்புக் கலவரம் நடந்து மோசமான சூழல் நிலவிய போதும், அரசு சொத்துகள், தனியார் சொத்துகள் தீக்கிரையான போதும், ஏராளமான உயிர்கள் பலியானபோதும் அமித்ஷாவை எங்கும் காண முடியவில்லை. அவர் எங்கு சென்றார்?" என்று சிவசேனா ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியது.
அமித்ஷா
இதற்கு பிறகு அமித்ஷா தன் விளக்கத்தை தெளிவுபடுத்தினாலும், "போராடுபவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள், இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்று பாஜக தலைவர்கள் பேசியிருக்க கூடாது" என்ற யதார்த்தத்தையும் அவர் மெதுவாகவே புரிந்து கொண்டார்! இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்பட நாடு முழுவதும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குப் போக முடியாமல் பெரும் துயரக்குள்ளாகியதிலும் அமித் ஷாவின் பெயர் அடிபடுகிறது.
சுகாதாரதுறை
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது... 27 பேர் உயிரிழந்துள்ளனர்.. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.. பெரும்பாலானோர் சொந்த ஊர் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.. வீடில்லாமல், சாப்பிடவும் வழியில்லாமல் எண்ணற்றோர் சிக்கி வருகின்றனர்.. வெளியூர் ஹாஸ்டல்களில் மாணவர்கள் அங்கிருந்து இடம் பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.. நாய், பூனைகள் உட்பட எந்த ஜீவராசிகளுக்கும் சாப்பாடு இல்லை.
ஆபத்து
லாக் டவுன் என்று சொல்லிவிட்டாலும், அசாம் மாநிலத்தில் கடைகளை மூடச் சொன்ன போலீசார்கள் மீது கடைக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.. நேற்றிரவு நடைபயணமாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக நடக்க ஆரம்பித்துவிட்டனர்.. வெளியே வந்தாலே ஆபத்து, கூட்டம் கூடினாலே நோய் தொற்று என்று தெரிந்தும்தான் மக்கள் தங்கள் குழந்தைகளை கையிலும், இடுப்பிலும் தூக்கி கொண்டு நடந்தனர்.. 50 ஆயிரம் பேர் இப்படி ஒட்டுமொத்தமாக திரண்டு சென்றதை பார்க்கும்போது அது வலியையே ஏற்படுத்தியது.. இப்படிப்பட்ட சூழலிலும் அமித்ஷா எதுவுமே பேசவில்லை.
அமித்ஷா எங்கே
இதையடுத்துதான் ட்விட்டரில் "அமித்ஷா எங்கே"என #WhereIsAmitShah என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. ஒரு உள்துறை அமைச்சர், இப்படித் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களுக்குப் பாதுகாப்பான முறையில் செல்ல போதிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா.. என்பதுதான் ஹேஷ்டேக்கை டிவீட் செய்பவர்களின் ஆதங்கமாக உள்ளது.
சிக்கல்கள்
இன்னொரு பக்கம் ஆஸ்பத்திரியில் போதிய உபகரணங்கள் இல்லை என்கிறார்கள்.. முக்கியமாக வெண்டிலேட்டர் வசதி போதிய அளவில் இல்லை என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது... இதற்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும், நடைமுறை சிக்கல்கள் தீரவில்லை.. இதை பற்றியும் உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல் இருப்பதுதான் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "அமித்ஷா மூன்று மாத தனிமைப்படுத்தலில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், "ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் வீட்டுக்கு நடந்தே செல்கின்றனர், சிலர் வீட்டுக்கு செல்ல முடியாமல் திணறுகின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு வார்த்தை பேசவுமில்லை, அவரை பார்க்கக் கூட முடியவில்லை. அரசு முடிவுகளின் தற்போதைய நிலையை நாங்கள் உணர்கிறோம்" என்று கொஞ்சம் நீளமான காட்டத்துடனேயே பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் அமித்ஷாவின் பெயர்தான் தற்போது டிரெண்டிகாகிக் கொண்டுள்ளது. கூடவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது.