இனிதான் ஆபத்து.. பச்சையோ ஆரஞ்சோ.. மதுகடைகளை திறக்க ஏன் இவ்வளவு அவசரம்.. இந்த அபாயம் தேவையா?
பச்சை மண்டலங்களில் மதுக்கடைகளில் திறந்தால் விபரீதம் உருவாக வாய்ப்புள்ளது
சென்னை: இனிமேல்தான் ஆபத்து அதிகமாக போகுது.. பச்சை மண்டலங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இப்போதே திறக்க வேண்டுமா? இவ்வளவு அவசர அவசரமாக திறக்க வேண்டிய அவசியமும், கட்டாயமும் நிர்ப்பந்தமும் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சிகப்பு, பச்சை, ஆரஞ்சு என ஜோன்களாக பிரிக்கப்பட்டு, இப்பகுதிகளையே காரணப்படுத்தி ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது... அதேசமயம், லாக்டவுனை நீட்டித்திருக்கும் மத்திய அரசு, மே-4ம் தேதி முதல் எதெல்லாம் இயங்கும், செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதில் முக்கியமான ஒரு விஷயம் மதுபானக்கடைகள் குறித்த அறிவிப்புதான்!
பச்சை மண்டலத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றி மதுபானக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது... அதன்படி, ஒரு நபருக்கு 6 அடி இடைவெளியிட்டு மொத்தம் 5 பேர் மட்டும் ஒருமுறை கடைக்குள் அனுமதிக்கப்படவேண்டும்.
மதுபான கடைகள்
ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது... இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த ஒருசில மணி துளிகளிலேயே தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக உள்ளது... அதனால், மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் முதலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறக்கப்படும் என எதிர்பாக்கலாம் என்ற செய்திகளும் பரபரபத்தன..மதுக்கடைகளால் அரசுகள் வருமானம் இழந்து வருவது உண்மையே.. நஷ்டத்தில் தவித்து திண்டாடுவதும் நிதர்சனமே!!
மதுவிலக்கு
நம் மாநிலத்தை பொறுத்தவரை மதுவிலக்கு, மதுக்கடைகள், என்பதற்கு ஏகப்பட்ட சரித்திர முரண் வரலாறுகள் உள்ளன.. யார் ஆட்சியில் இருந்தாலும் மதுக்கடைகளை மூட மாட்டோம் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்.. தற்போது ஊரடங்கினால் ஒரு மாசத்துக்கும் மேலாக மதுக்கடைகள் மூடி கிடக்கின்றன. இதனால் தமிழக மக்களில் பலரும் குறிப்பாக பெண்மணிகள், இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்... குடிமகன்கள் இதனால் பெருமளவு அவதிப்பட்டாலும்கூட ஏழைக் குடும்பங்கள் நிம்மதியாக உள்ளன. ஒருசிலர் தற்கொலையும் செய்தனர்.. ஆனால், இந்த ஒரு மாசத்தில் தமிழகம் உண்மையிலேயே நிம்மதியாக இருக்கிறது. எத்தனையோ பெண்களின் அடிவயிற்றில் நிம்மதி சுரந்தது.
ஊரடங்கு
அதனால் ஊரடங்கை நீட்டித்தாலும், தளர்த்தாலும் மதுக்கடைகளுக்கு விலக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.. இந்த சமயத்தில்தான் ஒரு செய்தி கசிந்தது.. கடந்த வாரம் முக்கிய அதிகாரிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கலாமா, வேண்டாமா என்ற விவாதத்தை நடத்தி உள்ளார்.. அப்போது, மதுக்கடைகளை மூடினால் வருமானம் குறையும் என்றாலும், அரசுக்கு நல்ல பேர் வருமே, அதனால் படிப்படியாக மூடலாம்" என்று ஆலோசித்ததாக கூறப்பட்டது. ஒருவேளை முதல்வர் மதுக்கடைகளை மூடினால் நிச்சயம் அதிமுக அரசுக்கு மேலும் நல்ல பெயர் வந்து சேரும், குறிப்பாக எடப்பாடியாரை தூக்கி வைத்து நம் மக்கள் புகழ்வார்கள் என்றும் யூகிக்கப்பட்டது.
டாக்டர் ராமதாஸ்
இந்த தகவல்கள் வந்த சமயத்தில்தான், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒருஅறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், 2 விஷயங்களை குறிப்பிட்டு சொல்லி இருந்தார்.. "மதுக்கடைகளை மூடினால் மதுவுக்கு அடிமையானவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவார்கள், கள்ளச்சாராயம் பெருகும் என்று இவ்வளவு காலம் பொய்யை சொல்லி வந்துள்ளனர்.. அப்படி எதுவுமே இந்த ஒரு மாசத்தில் நடக்கவில்லை.. மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் தமிழக அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது...கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கதான் செய்யும்" என்ற தன் கருத்தையும், விருப்பத்தையும் சொல்லி இருந்தார்.. இதையேதான் நாம் தமிழர் கட்சி சார்பாகவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
சிவப்பு மண்டலம்
ஆனால் இவை அத்தனையும் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.. தமிழகம் தற்போது முழுவதுமாக கொரோனாவில் மீண்டு வரவில்லை.. பச்சை மண்டலத்தில் அனுமதி தந்தால், நம் ஆட்கள் ஆரஞ்சு, ரெட் கலர் ஜோன்களில் இருந்து நடந்தேகூட சென்று மதுவை வாங்கி விடுவார்கள்.. வழக்கமாக பாண்டிச்சேரி வரை ரிஸ்க் எடுத்து சென்று வாங்கும் குடிமகன்களுக்கு ஜோன்கள் கலர்கள் எல்லாம் கண்களில் படாது!! அதன் ஆபத்துக்களும் புரியாது!
குடிமகன்கள்
எனினும் இந்த பச்சை மண்டலத்தில் கடைகளை திறந்தால் ரிஸ்க் மேலும் அதிகமாகும்... இத்தனை நாட்கள் மதுவுக்காக ஏங்கியிருக்கும் குடிமகன்கள் சரியான இடைவெளியை பின்பற்றி மதுவை வாங்குவார்களா? அல்லது, இன்னும் நிலைமையை மோசமாக்கி விடுவார்களா? அல்லது பச்சை மண்டலத்தில் திறக்கப்படவிருக்கும் கடைகளை ஏதாவது குளறுபடிகள் செய்து திரும்பவும் மூட வைத்துவிடுவார்களா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. கடைகளை திறந்தால் பல ஊர்களை சேர்ந்தவர்களும் வந்து குவிய வாய்ப்பு ஏற்படும். மேலும் மதுக் கடைகளில் கூட்டம் நிரம்பினால் நல்லா உள்ள பகுதிகளும் பாதிக்கப்படும்.
வருமானம்
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான்.. "தமிழகத்தின் மிகப்பெரிய வலிமை மனிதவளம்... மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 4 லட்சத்து 18,379 கோடி அதிகரிக்கும். இதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வருவாய், மது வணிகத்தால் கிடைக்கும் வருவாயை விட அதிகமாக இருக்கும். அதனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதால் தமிழக அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாது.. மாறாக ஒட்டுமொத்தமாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்... அதுமட்டுமின்றி தமிழகத்தின் பொருளாதாரம் தழைக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்" என்பதை நம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சரக்குகள்
முதலில், இவ்வளவு அவசர அவசரமாக மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியமே இல்லை.. இது எல்லாவற்றிற்கும் மேலாக பார்களில் சமூக விலகலை நிச்சயம் கடைப்பிடிக்கவே முடியாது.. ஒரு ஊரில் சரக்குகளை எடுப்பதற்காக வந்த லாரியை முற்றுகையிட்டு குடிகாரர்கள் செய்த அட்டகாசத்தை மறக்க முடியாது. தடியடி நடத்தும் அளவுக்கு கூட்டம் கூடி விட்டது. லாக் டவுன் முடிந்தாலும், எப்படியும் 6 மாசத்துக்கு சமூக விலகல் கட்டாயம் தேவைப்படுகிறது.. எனவே பச்சையோ, ஆரஞ்சோ எந்த ஜோன்களாக இருந்தாலும்சரி, இப்போதைக்கு மதுக்கடைகளை திறப்பது உசிதம் இல்லை.
மதுவிலக்கு
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் ஒரு கேள்வியை முதல்வரிடம் எழுப்பியிருந்தனர்."மதுவிலக்கை அமல்படுத்தறதா சொல்லியிருந்தீங்களே, என்னாச்சு" என்று கேட்டனர்.. "படிப்படியாகத்தானே அமல்படுத்த முடியும், ஒரேடியாக முடியாது.. அதேசமயம் கள்ளச்சாராயம் பெருகிடாமலும் பார்த்துக்கணும்" என்றார் முதல்வர்.. அந்த கூற்றுப்படியே அதிமுக அரசு செயல்படுவதே சிறப்பானதாக இருக்கும்.