தொகுதி வாரியாக மக்களை இணைக்க வாட்ஸ்அப்.. பிரச்சாரத்திற்கு ட்விட்டர் ஆர்மி.. அதிமுக ஐடி விங் அதிரடி
சென்னை: உடனுக்குடன் தகவல்களை பரிமாற உலகத்தைச் சுருக்கி உள்ளங்கையில் வைத்துள்ளது தகவல் தொழில்நுட்பம்" என்ற வரிகளுக்கேற்ப இனிவரும் காலங்களில் அரசியலும் தகவல் தொழில்நுட்பத்திற்குள் அடங்கி விடும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
துறை சார்ந்த வளர்ச்சி மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளின் வெற்றிக்கும் தகவல் தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
இதை உணர்ந்தே பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் டேட்டா அனலைசிஸ்ட் மற்றும் ஐஐடி, ஐஐஎம் மாணவர்களை வேலைக்கு எடுத்து தொழில்நுட்பம் மூலம் தங்களின் கட்சி பற்றியான செயல்பாடுகளை டிஜிட்டல் விளம்பரங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இந்திய அளவில் இந்த கட்சிகள் தகவல் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் தமிழகத்தில் இக்கட்சிகளின் தகவல் தொழில்நுட்பத் தாக்கம் குறைவே என்று கூறலாம்.
நாட்டிலேயே முதல் முதலாக தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற அணியை அஇஅதிமுகவில் உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த வகையில் அது ஒரு தொலைநோக்கு திட்டம் என்பது இப்போது நிரூபணமாகி வருகிறது.
வேலூர் கோட்டையப் பிடிக்க வேட்டையில் குதித்த துரைமுருகன்.. மகனுக்காக மெனக்கெடுகிறார்!
திமுக வேறு ரூட்
அஇஅதிமுக-வின் ஆதரவு இலக்கை அதிகரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த அணிக்கு, சுவாமிநாதன் என்பவரை மாநில செயலாளராக நியமித்து 2014 பொது தேர்தலை அஇஅதிமுக சிறப்பாக சந்தித்தது. இதை உணர்ந்துதான், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், சில தனியார் நிறுவனங்கள் மூலம் 2016 சட்டமன்ற தேர்தலுக்குமுன் "நமக்கு நாமே" போன்ற பிரசாரங்களை நடத்தினார் என்று கூறுவார்கள்.
தகவல் தொழில்நுட்ப அணி
இந்த நிலையில், முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம் அகமதாபாத்தில் படித்தவரும், முன்னாள் சிங்காநல்லூர் தொகுதி சட்டசபை உறுப்பினருமான, சிங்கை கோவிந்தராசுவின் மகன் சிங்கை ராமச்சந்திரனை, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக நியமித்தார் ஜெயலலிதா. கட்சி இளைஞர்களை வைத்து பல புதிய குழுக்களை அமைத்து உத்வேகத்தோடு திமுகவை எதிர்த்தது அதிமுக. 2016 தேர்தலில் திமுக தோல்வியடைய சமூக வலைத்தளங்களில் அதிமுக ஆதிக்கம் செலுத்தியதும் ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன்பிறகுதான், திமுக கட்சிகென்று ஒரு தகவல் தொழில்நுட்ப அணி வேண்டும் என்பதை உணர்ந்து, ஒரு வருடத்திற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி நிர்வாகிகளை நியமித்து வருகிறது அக்கட்சி தலைமை.
அதிமுக vs திமுக ஐடி விங்
இந்த நிலையில்தான், வரும் 2019 பொதுதேர்தலுக்கு அதிமுக, திமுக இரண்டின் தகவல் தொழில்நுட்ப பிரிவும் இப்போது நேருக்கு நேர் எதிர்த்து நிற்கப்போகின்றன. இதற்காக, பிரத்யேகமாக அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சென்னையில் கார்பரேட் அலுவலகத்தை போல் தனி அலுவலகம் அமைத்து, சிங்கை ராமசந்திரன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த இளைஞர்களை கொண்டு ஒரு குழு அமைத்து கடந்த இரண்டு மாதங்களாக இயங்குவதாக அஇஅதிமுக வட்டாரங்களில் கூறுகின்றனர்.
செம வேலைகள்
இந்த குழு மொத்த வாக்காளர்களை கணக்கிட்டு வயது, பாலினம், கல்வி, வேலைவாய்ப்பு, படித்தவர், படிக்காதவர், இளைஞர்கள், முதியோர் என அதற்கு ஏற்றாற்போல் 14 வகைகளாக பிரித்து தனித்தனியாக ஒவ்வொருத்தருக்கும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை இன்ஃபோகிராபிக்ஸ் (Infographics), வீடியோக்கள், மீம்ஸ்கள் மூலம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது என்கின்றனர். அதுமட்டுமின்றி தொகுதி வாரியாக வாட்ஸ்அப் மூலம் மக்களை இணைப்பது, பூத் வாரியாக வகைபடுத்தி தகவல்களை கணக்கெடுத்து கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை கட்சி தலைமையின் வழிகாட்டுதலின்படி செய்ய துவங்கியுள்ளனர்.
ட்விட்டர் ஆர்மி
இதற்கு அடித்தளமிடும் வகையில்தான் இதுவரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களை ட்விட்டர் கணக்கிற்குள் வரவழைக்கப்பட்டு "AIADMK TWITTER ARMY" என்ற மிகப்பெரிய ட்விட்டர் குழுவை உருவாக்கியுள்ளதாக அஇஅதிமுகவில் ஒரு மூத்த நிர்வாகி 'ஒன்இந்தியா தமிழிடம்' கூறினார். இதை பற்றி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரனிடமே பேசினோம். அவர் கூறுகையில், "அம்மா அவர்களின் ஆசியுடன், எங்கள் தலைமையின் வழிகாட்டுதலின்படி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், எதிர்கட்சிகளின் பொய் பிரசாரங்களை சமுக வலைதளங்களில் முறியடிப்பதிலும் இரவு பகல் பாராமல் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சமுகவலைதள நண்பர்கள் பணியாற்றி வருகின்றனர்" என்றார்.
முழு தகவல் சொல்ல முடியாது
மேலும் அவர் கூறியது, "வருகின்ற 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை சந்திப்பதற்கு தேவையான அனைத்து யுக்திகளையும் தலைமையின் வழிகாட்டுதலின்படி கையாண்டு தயார் நிலைப்படுத்தி வருகிறோம். இது பற்றிய முழு தகவல்களை தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாது, ஏனெனில் எங்கள் சமூகவலைதளம் மற்றும் தொழில்நுட்ப யுக்திகள் எதிர்கட்சியினருக்கு தெரிந்துவிடும். வருகின்ற தேர்தலை எதிர்கொண்டு எதிர்கட்சியினரின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 'அம்மா' அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துசெல்ல தேவையான அனைத்து தொழில்நுட்ப யுக்திகளும் தயார் நிலையில் உள்ளன" எனக் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் அரசு
முதல்வர், துணை முதல்வர் உட்பட 23 அமைச்சர்கள் அன்றாடம் நடக்கும் அரசு நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் உடனுக்குடன் பதிவிட்டு மக்களோடு நேரடி தொடர்பில் உள்ளதும், சில அமைச்சர்கள் மக்களின் குறைகளை நேரடியாக தங்களது டிவிட்டர் பக்கம் மூலம் கேட்டறிந்து தீர்த்துவைப்பதும் நாளுக்குநாள் அதிகரிப்பது சமூக வலைத்தளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் யுகம்
இந்த சூழ்நிலையில், திமுக தங்களது தொழில்நுட்ப அணியுடன் சேர்ந்து செயல்பட ஒரு தனியார் நிறுவனத்தை வரும் பொதுதேர்தலுக்கு உபயோகப்படுத்த உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் நெருங்கும்போது இந்த சமூகவலைத்தள 'போரில்' இன்னும் பல தொழில்நுட்ப யுக்திகள் வெளிவரும் என்பது உறுதியே. இது தொடர்பாக சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் லோக்சபா தேர்தலுக்கான அனைத்து யுக்திகளையும் ஆலோசித்து தயார்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின்றன.