வேலூர் தேர்தல் எதிரொலி.. ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைகிறது சட்டசபை கூட்டத் தொடர்
Recommended Video
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தல் காரணமாக, சட்டப்பேரவை தொடரை வரும் 20 ஆம் தேதியுடன் நிறைவு செய்ய, சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, முதல்முறையாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் கடந்த 28 ம் தேதி தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவித்த பின் அவை ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ம் தேதி பேரவை மீண்டும் கூடியது. ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வேலூர் தேர்தல் எதிரொலி
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் - ஜூலை11 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 9 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
20ஆம் தேதி வரை கூட்டம்
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு தயாராக வேண்டும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள்
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிஎண் 110ன் கீழ் உணவு & நுகர்வோர் பாதுகாப்பு துறை, வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, கூட்டுறவு ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.
ரூ.24.91 கோடி ஒதுக்கீடு
அப்போது, கூட்டுறவு நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.36.41 கோடி மதிப்பில் சொந்த கட்டிடங்கள் கட்டப்படும். 143 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.24.91 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்படும் என்றார்.
நவீன அரிசி ஆலை
எதிர்காலத்தில் உணவு தானியங்களை இருப்பு வைப்பதற்கான தேவையினை கருத்தில் கொண்டு கூடுதலாக 36,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 கிடங்குகள் பல்வேறு இடங்களில் ரூ.59.40 கோடி மதிப்பில் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறனுடன் கூடிய நவீன அரிசி ஆலை சுமார் ரூ.25 கோடி மதிப்பில் நடப்பாண்டில் நிறுவப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்
அதேசமயம், பால் விலை உயர வாய்ப்புள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் சூசகமாக கூறினார். சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முயற்சியை தடுக்க, தமிழக அரசு அனைத்து வகையிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.