தொடங்கியாச்சு… வேட்பு மனு தாக்கல்… தமிழகத்தில் ஒரே நாளில் 20 பேர் மனு தாக்கல்
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது.
Recommended Video
சென்னை:லோக்சபா தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி நடக்கிறது.
ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் லோக் சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வடசென்னையில் 4 வேட்பாளர்களும், தென் சென்னையில் 3 வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.