காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை?.. திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. நாளை அறிவிப்பு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது என்பது நாளை அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது என்பது நாளை அறிவிக்கப்பட உள்ளது.
லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்க உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்தலுக்காக திமுக மிக தீவிரமாக செயலாற்றி வருகிறது. லோக்சபா தேர்தலில் திமுக தமிழகத்தில் பெரிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க இருக்கிறது.
10 தொகுதிகள்
திமுக கூட்டணியில் 10ல் காங்கிரஸ் கட்சி போட்டியிட இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.
ஆலோசனை ஒப்பந்தம்
இந்த தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ராமசாமி, தங்கபாலு ஆகியோர் அடங்கிய காங்கிரஸ் மூவர் குழு ஆலோசனையில் பங்கேற்றது. துரைமுருகன் தலைமையில் திமுகவில் ஆறுபேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.
ஒப்பந்தம் போடப்பட்டது
இந்த பேச்சுவார்த்தை உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் ஒரு தொகுதி புதுச்சேரி என்று ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் மீதமுள்ள 9 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.
எந்த தொகுதிகள்
ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எது என்பது இன்று அறிவிக்கப்படாது, நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நாளை திமுக கழக நிர்வாகிகள் இதுகுறித்து அறிவிப்பார்கள் என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.