4 முக்கிய தொகுதிகள்.. களமிறக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்.. திமுகவின் பிளான் இதுதானோ?
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மிக முக்கியமான நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளில் மொத்தம் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
மீதமுள்ள 20 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது. இதற்கான தொகுதிகள் இன்றுதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்செட் ஆரம்பம்.. காங்கிரஸ் 'கோட்டை' நெல்லை திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்டது ஏன்?
என்ன தொகுதிகள்
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. திருப்பூர் மற்றும் நாகை (தனி) தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
பெரிது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த 4 தொகுதிகளிலும் பெரும்பாலும் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளே கம்யூனிஸ்டுகளை எதிர்த்து போட்டியிட போகிறது என்று செய்திகள் வருகிறது. கோவையிலும், திருப்பூரில் பாஜக போட்டியிடும். நாகையிலும், மதுரையிலும் அதிமுக போட்டியிடும் என்று கூறுகிறார்கள். இரண்டு பெரிய கட்சிகளை கம்யூனிஸ்ட்கள் எதிர்த்து போட்டியிட இருக்கிறார்கள்.
இவர்களின் வெற்றி முக்கியம்
திமுக 40 தொகுதிகளில் குறைந்தது 36 இடங்களில் வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெறுவது அதிக தேவையாக திமுக கூட்டணிக்கு மாறி இருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் இங்கு நடத்த தேர்தல்களில் பெரும்பாலும் மூன்றாம் இடமே பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை, திருப்பூர்
திருப்பூர் மற்றும் கோவையில் பல தொழிற்சாலைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி காரணமாக பாதிக்கப்பட்டது. பல நிறுவனங்கள் இதனால் மூடப்பட்டது. இதனால் இதற்கு எதிரான தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கை கொண்ட கம்யூனிஸ்டுகள் இங்கு நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது பலன் அளிக்குமா என்று மே 23 தான் தெரியும்.
அட மதுரை
அதேபோல் திமுக பலமாக இருக்கும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் மீது கோபத்தில் இருக்கும் மு.க அழகிரி இருக்கும் மதுரையை திமுக தவிர்த்து இருப்பதாக கூறுகிறார்கள். தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என்று திமுக இந்த தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
நாகப்பட்டினம் தனித்தொகுதி
அதேபோல் திமுக கொஞ்சம் வலுவாக இருக்கும் தனி தொகுதியான நாகப்பட்டினம் தொகுதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த கஜா புயலின் போது இந்திய கம்யூனிஸ்ட் இங்கு அதிக அளவில் மீட்பு பணியில் ஈடுப்பட்டது. அதேபோல் இங்கு பாரம்பரியமாக கம்யூனிஸ்ட் குடும்பங்கள் நிறைய இருக்கிறது. அதனால் இங்கு திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை களமிறக்கி உள்ளது என்கிறார்கள்.