ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி நிகழ்ச்சி… விசாரணை நடத்த உத்தரவு
சென்னை: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார் . ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், அரசியல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதில், மத்திய அரசின் திட்ட குளறுபடிகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் குறித்து ராகுல் பதில் அளித்தார்.
இந்த நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து ராகுல் காந்தி நாகர்கோவிலில் நடந்த கூட்டணி கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் ராகுல் காந்தி நிகழ்ச்சியை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடத்த அனுமதி அளித்தது எப்படி என்று விசாரிக்க கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4 முக்கிய தொகுதிகள்.. களமிறக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்.. திமுகவின் பிளான் இதுதானோ?
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி என்று விசாரிக்குமாறு மண்டல இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மண்டல இயக்குனர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார் என தெரிகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரிக்கு அனுப்பிய நோட்டீசை உடனே அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இல்லை என்றும் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் ராகுல் உரையாற்றியதற்கு ஆட்சேபனை செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார்.