ஜனநாயக கடமையை நிறைவேற்ற கிளம்பியாச்சு... இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தேர்தலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தன.
ஜனநாயகத் திருவிழா என கூறப்படும் தேர்தலில் வாக்களிப்பதற்காக, தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு இன்றும், நாளையும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரலாறு காணாத மிடில் கிளாஸ் தேர்தல்.. அதிக ஏழை வேட்பாளர்கள்.. திமுக, அதிமுகவுக்கு இதில் இடமில்லை!
பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று 650 பேருந்துகளும் நாளை 1500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, தொழில் நகரமான திருப்பூர் ,கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்காளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஒரே நேரத்தில் கூடுவார்கள் என்பதால், நெரிசலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே போல், பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது, ஊருக்கு சென்று விட்டு, திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், தேர்தல் முடிந்த பிறகு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.