அதிமுக சார்பில் போட்டியிட 1,737 பேர் விருப்ப மனு... 2014 லில் 4,500 பேர் விருப்ப மனு
சென்னை: அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கான அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 1,737 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அதே நேரம், கடந்த 2014-ம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட 4500-க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் 25 ஆயிரம் பணம் செலுத்தி விண்ணப்பங்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர், கடைசி நாளில் விருப்ப மனு பெற கால அவகாசம் 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி மனு செய்துள்ளார். அதே போல், தற்போதைய எம்.பியான தம்பிதுரையும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், கட்சிக்குள் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுவரை 1,737 பேர் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அதே சமயம், விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.