பாஜகவுடன் பேசுகிறோம்.. விஜயகாந்த் வந்ததும் அறிவிப்பார்.. தேமுதிக கூட்டணி பற்றி சுதீஷ் பேட்டி!
லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த முறை நான்குமுனை போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே முடிவாகிவிட்டது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தனித்தனியாக போட்டியிட இருக்கிறது. இந்த நிலையில் பாஜக - அதிமுக - தேமுதிக இந்த தேர்தலுக்காக கூட்டணி வைக்கும் என்று கூறுகிறார்கள்.
ஏற்கனவே இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது இதுகுறித்து தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.
அதில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடக்கும். அதன்பின் கூட்டணி குறித்து அறிவிப்போம்
நாங்கள் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான். விரைவில் இந்த கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
இன்னும் 2 வாரங்களில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்புவார். அவர்தான் கூட்டணி குறித்து அறிவிப்பார். அவர் வந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இன்னும் சில மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேர்தலுக்காக தேமுதிகவில் பொறுப்பாளர்களை நியமித்து வேகமாக பணியாற்றி வருகிறோம். தொண்டர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள், என்று எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார்.