என்ன அநியாயம் இது.. அந்த ஒரு பேச்சுதான் கனிமொழியின் அரசியலை மாற்றியது.. வெற்றி கைவசமான கதை!
ராஜ்ய சபாவில் திமுக எம்.பி கனிமொழி 10% இடஒதுக்கீடு குறித்து பேசியதுதான் அவரது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: ராஜ்ய சபாவில் திமுக எம்.பி கனிமொழி 10% இடஒதுக்கீடு குறித்து பேசியதுதான் அவரது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுதான் அவரது அரசியல் வாழ்க்கையை பெரிய அளவில் மாற்றியது.
சமூக நீதி.. இந்த ஒற்றை வார்த்தைதான் திமுகவை பல அரசியல் மாற்றங்களுக்கு இடையிலும் உயிர்ப்பாக வைத்து இருக்கிறது. அண்ணா தொடங்கி ஸ்டாலின் வரை அந்த சமூக நீதி ஒளிதான் திமுகவை வழி நடத்திக் கொண்டு இருக்கிறது.
அதே சமூக நீதிதான் தற்போது கனிமொழிக்கு தூத்துக்குடியில் இமாலய வெற்றியை தேடித் தந்து இருக்கிறது. ஒரே ஒரு பேச்சு.. மக்களவையில் எம்பியாக இருந்த போது கனிமொழி பேசிய ஒரே ஒரு பேச்சுதான் அவரின் அரசியல் வாழ்க்கையை சிங்கப் பாதைக்கு இட்டுச் சென்றது.
வெற்றி
தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட போகிறார் என்ற போதே அவரின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனால் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். இதனால் கனிமொழி வெற்றி சந்தேகம் ஆனது. ஆனால் அதை எல்லாம் உடைத்து தள்ளிவிட்டு, அசால்ட்டாக கனிமொழி இந்த தேர்தலில் வென்றுள்ளார்.
முக்கியம்
இந்த வெற்றிக்கு பின் முக்கியமான ராஜ்ய சபா பேச்சு ஒன்றும் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ராஜ்யசபாவில் மேல் ஜாதியில் உள்ள பொருளாதார ரீதியான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. எல்லா கட்சிகளும் சொல்லி வைத்தார் போல மசோதாவை ஆதரித்தது. அதிமுகவும் ஆதரித்தது.
கம்யூனிஸ்ட் எம்பி
தமிழகத்தில் இருந்து தேர்வான, கம்யூனிஸ்ட் எம்பி டிகே ரங்கராஜன் கூட மசோதாவை ஆதரித்து பேசினார். அப்போதுதான் ஒரு குரல் அதை எதிர்த்தது. என்ன அநியாயம் இது என்று ரங்கராஜனை பார்த்து பொங்கி எழுந்தது ஒரு குரல்.. அவையில் நிலவிய ஆதரவு குரல்களுக்கு இடையே சீறி வந்து எதிர்ப்பு தெரிவித்த அந்த குரல் திமுக எம்.பி கனிமொழியுடையது. அம்பேத்காரின் பொன்மொழியில் தொடங்கி நான் பெரியார் மண்ணின் புதல்வி என்று கூறியது வரை.. அவரது பேச்சு அவையை அதிர வைத்த ஒன்று.
|
சொன்னார்
நான் பெரியார் மண்ணில் இருந்து வந்துள்ளேன். எங்களுக்கு சமூக நீதிதான் முக்கியம். சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டுவர, முதன்முதலாக இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததே நீதிக்கட்சி ஆட்சி என்பதை பதிவு செய்கிறேன். அந்த இடஒதுக்கீடும், இதுவும் எப்போதும் ஒன்றாக இருக்காது, என்று அவையில் பேசினார்.
எல்லோருக்கும் ஆச்சர்யம்
ஏற்கனவே திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா அவையில் தனக்கு என்று ஒரு முத்திரை பதித்தவர். கனிமொழியும் அன்று ராஜ்யசபாவில் அப்படித்தான் முத்திரை பதித்தார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அன்றைய நாளுக்கு பின் கனிமொழியின் அரசியல் பாதை பூ பாதையாக இருக்கவில்லை. அதன்பின் ஸ்டெர்லைட்டை எதிர்த்து வெளிப்படையாக குரல் கொடுத்தார், திமுக அரசியல் குறித்து நேரடியாக டிவிட்டரில் வாதம் செய்தார்.
தூத்துக்குடியில் எதிர்த்து
தூத்துக்குடியில் தமிழிசை ஆதரவு மக்கள் கனிமொழியை எதிர்த்த போது அவர்களை மிக சாதுரியமாக எதிர்கொண்டார். தூத்துக்குடியில் நிலவிய திமுக கோஷ்டி மோதல்களை சரிப்படுத்தினார். தூத்துக்குடியில் வெற்றியை நாட்டியதற்கு பின் கனிமொழியின் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது.
வெற்றியை நாட்டினார்
அந்த உழைப்பிற்கான பலனை இப்படி அவர் ஈட்டி இருக்கிறார்.. இத்தனை நாட்கள் ராஜ்யசபாவில் மட்டும் ஒலித்து வந்த அவரது குரல் இனி லோக்சபாவில் ஒலிக்கும்.. அந்த குரல் சமூக நீதியின் குரலாக தொடரும் என்று எதிர்பார்க்கலாம்!