உருமாறிய வைரஸால் அதிக உயிரிழப்பு ஏற்படுமா?... ஒன் இந்தியா தமிழுக்கு லண்டன் டாக்டர் சிறப்பு பேட்டி!
சென்னை: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புதிதாக உருமாறிய வைரசால் மக்கள் பீதி அடைய தேவையில்லை என லண்டனில் வசிக்கும் சேலத்தை சேர்ந்த சிறப்பு டாக்டர் மணிகண்டன் கதிர்வேல், ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
Recommended Video
தற்போது உலக நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தடுப்பு மருந்துகளே உருமாறிய கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் என அவர் கூறினார்.
பொதுமக்கள் முறையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ள முடியும் எனவும் மணிகண்டன் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் ஆட்டமே இன்னும் முடியாத நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் புதியதாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து லண்டனில் உள்ள தமிழரான சேலத்தை சேர்ந்த சிறப்பு டாக்டர் மணிகண்டன் கதிர்வேல், ஒன் இந்தியா தமிழ் நியூஸ் தளத்துக்கு அளித்த பிரத்யேகமான பேட்டி பின்வருமாறு:-
இது புதிய வைரஸ் அல்ல
லண்டனில் புது வைரஸ் தோன்றியுள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். இது தவறு. இது புது வைரஸ் கிடையாது. இது ஏற்கனவே இருக்கும் வைரஸில் இருந்து உருமாறிய வைரஸ்தான். நாம் கண்டுபிடிக்கும் மருந்துகளில், நடவடிக்கைகளில் இருந்து வைரஸ் நீண்ட நாள் வாழ இவ்வாறு உருமாறி கொள்வது இயல்பான ஒன்றுதான். பழைய வைரஸில் இருந்து 23 அமைப்புகளில் வைரஸ் உருமாறி உள்ளது. மனித செல்களை தாக்கும் திறனை இந்த உருமாறிய வைரஸ் அதிகம் பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்ப்பு சக்தி தேவை
அதிக மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானபிறகே கொரோனா வைரஸ் இந்த உலகில் இருந்து செல்லும். இன்னும் பலமுறை கொரோனா வைரஸ் உருமாறலாம். முதலில் உள்ள வைரசை விட உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தானது. மிக வேகமாக பரவக்கூடியது. லண்டனில் கொரோனா பாதித்தவர்களில் 3-ல் 2 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டுப்படுத்திடும்
ஏற்கனவே உள்ள வைரசுக்கு உள்ள அறிகுறிகள்தான், உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் தெரியும். உருமாறிய வைரஸால் அதிக பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்படும் என்பது இதுவரை கண்டறியப்படவிலை. தற்போது உலக நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தடுப்பு மருந்துகளே உருமாறிய கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சூழ்நிலைதான் காரணம்
ஆனாலும் அதன் வேகம், பாதிக்கும் தன்மை ஆகியற்றை பொறுத்தே இதனை முழுமையாக கூற முடியும். பொதுவாக கொரோனா வைரஸ் எங்கு எப்போது அதிகமாக பாதிக்கும், குறைவாக பாதிக்கும் என்பதை கணிக்க முடியாது. அந்ததந்த இடங்களின் மக்கள் தொகை, நெருக்கம், சூழ்நிலையை பொறுத்தே வைரஸ் பாதிப்பு ஏற்படும்.
பாதுகாப்பு வழிமுறை அவசியம்
இங்கிலாந்துதான் உருமாறிய வைரஸின் பிறப்பிடம் என்று உறுதியாக கூற முடியாது. ஏனெனில் உருமாறிய வைரஸ் எங்கு வேண்டுமானலும் இருக்கலாம். இன்னும் புதிய உருமாறிய வைரஸ்கள் கண்டுபிடிக்காமல் கூட இருக்கலாம். இதனால் உருமாறிய வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம். முறையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினாலே இந்த வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ள முடியும். இவ்வாறு டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.