அமெரிக்கா விசாவுடன் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் என்.ஆர்.ஐ.க்கள்... பணியை நினைத்து கவலை
சென்னை: அமெரிக்காவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளவர்கள் மீண்டும் அங்கு திரும்ப முடியாத சூழல் நிலவுவதால் தங்கள் பணிகளை இழக்கக்கூடிய அபாயத்தில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒரு சிலரோ குடும்பத்தை பிரிந்து பிள்ளைகளை கூட பார்க்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே change.org இணையதளம் மூலம் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குமாறு கடந்த 24-ம் தேதி வரை 5400 என்.ஆர்.ஐ.க்கள் கையெழுத்திட்டு தங்கள் கோரிக்கையை இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் விமான போக்குவரத்து சேவை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகதது அவர்களுக்கு கவலையையும், மன அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து ஹைதரபாத் வந்துள்ள பிரியங்கா என்பவர் கூறுவதாவது, '' நான் கலிபோர்னியாவில் வசித்து வருகிறேன். ஹைதரபாத்தில் உள்ள எனது தாயார் இல்லத்திற்கு வந்த என்னால் மீண்டும் அமெரிக்கா திரும்பமுடியவில்லை. இதனால் நான் பணியை கூட இழக்க நேரிடும். எனது கணவரும் மகளும் கலிபோர்னியாவில் இருக்கிறார்கள். நான் இங்கு இருக்கிறேன்.
எனது மகளை தினமும் பேஸ்டைம் வீடியோ கால் மூலம் அழைத்து பேசுகிறேன். அவள் என்னை தேடுகிறாள். அவளின் ஏக்கத்தை என்னால் உணர முடிகிறது. எனது மகளை எனது கணவர் முடிந்தவரை சமாதானம் செய்து பார்த்துக்கொள்கிறார். மார்ச் 5-ம் தேதி இந்தியா வந்த நான் மார் 29-ம் தேதி இங்கிருந்து புறப்பட வேண்டியது. ஆனால் அதற்குள் இங்கு நிலைமை மாறிவிட்டது'' என்கிறார்.
இதேபோல் சென்னையை சேர்ந்த சரவணக்குமார் கூறுவதாவது, '' நானும் எனது 8 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் 5 வயது மகள் ஆகியோர் நெருங்கிய உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தோம். நாங்கள் அமெரிக்காவின் கரோலினாவில் வசித்து வருகிறோம். மார்ச் 24-ம் தேதி அமெரிக்கா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம்.
அங்கு தான் எனது மனைவிக்கு பிரசவம் பார்க்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனது மூத்த மகள் அமெரிக்காவில் பிறந்து அந்நாட்டு பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார். இப்போது விமான போக்குவரத்து சேவை தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனக் கூறுகிறார்.
இதில் எங்கு சிக்கல் எழுகிறது என்றால் எச் 1 பி விசா புதுபிப்பதை டிரம்ப் நிறுத்தி வைத்திருப்பது தான். மேலும் குடியேற்ற சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் திருத்தம் கொண்டு வரப்போவதாக அறிவித்திருப்பதும் இந்தியாவுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வந்தவர்களின் நிம்மதியை கெடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ள என்.ஆர்.ஐ.க்கள் பலரும் இப்படி பல்வேறு காலசூழ்நிலைகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்தும், பணியை இழக்கும் அபாயத்திலும் அவர்கள் இருப்பதால் இது தொடர்பாக மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.