5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தது சென்னை
5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
சென்னை: சாரை சாரையாக மக்கள் அணிவகுத்து சென்று 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
ஏழை மக்களுக்காக மட்டும்தான் மருத்துவ சேவை என்பதை மனதில் படிக்கும்போதே பதிய வைத்து கொண்டவர் ஜெயச்சந்திரன்.
அதனால்தான் பின்தங்கியிருந்த வண்ணாரப்பேட்டையில் 1972ல் ஒரு கிளினிக்கை ஆரம்பித்தார். 2 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை கட்டணம் வாங்கினர். 44 ஆண்டுகளாகவும் இதே கட்டணத்தைதான் வாங்கினார்.
பணம் தருவாராம்
அதோடு 24 மணி நேரமும் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தார் ஜெயசந்திரன். உடல்நலம் பார்த்து சிகிச்சை அளித்ததைவிட தன் பகுதி மக்களின் மனநிலையை பார்த்து சிகிச்சை அளித்தார். அது மட்டும்இல்லை, வயதானவர்கள், ஏழைகள் வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளித்துவிட்டு போகும்போது, கையில் இவர் பணம் கொடுத்து அனுப்புவாராம்.
தலைவர்கள் இரங்கல்
அதனால்தான் மக்கள் அவரை 5 ரூபாய் என்றே தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். நேற்று இவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். இதை அறிந்து ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மாலைகளை தூவினர்
இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் தொடங்கியது. அவரால் பயனடைந்த மக்களும், அவரது நன்பெயரை அறிந்தவர்களும் நேரில் சென்று இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். வழியெங்கும் கண்ணீர் மல்க மாலைகளை தூவியபடியே வந்தனர்.
கதறி அழுதனர்
பல வயதான பெண்கள் கதறி கதறி அழுதவாறே இறுதிவரை வந்தனர். ஒரு மருத்துவரின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் இவ்வளவு பேர் கலந்து கொண்டது காண்போரை நெகிழ செய்தது. இறுதியாக டாக்டர் ஜெயச்சந்திரனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.