இந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை!
சென்னை: சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழகத்திலும் தாமரை மலரும், இந்த மண்ணையும் மாற்ற நாங்கள் விரும்புகிறோம் என்றார். ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது . இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது" என்றும் கூறினார்.
பொங்கல் திருநாள் அன்று துக்ளக் இதழின் ஆண்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். விழாவில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்பது வழக்கம் ஆகும். அந்த வகையில்இந்த ஆண்டு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிந்து கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய ஜேபி நட்டா,. பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு நாடு முழுவதும் நல்ல ஆதரவு இருக்கிறது. அந்த ஆதரவு காரணமாகவே எல்லா தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுகிறோம்.
தமிழகத்தில் தாமரை மலரும்
வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னெடுத்து செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். தமிழகத்திலும் வருங்காலத்தில் எங்களுடைய தாமரை மலரும். பிரதமர் மோடிக்கு இங்கு நிறைய ஆதரவு உள்ளது. இந்த மண்ணையும் நாங்கள் மாற்ற விரும்புகிறோம். தமிழகத்தில் பல்வேறு துறையினர் பாஜகவில் இணைகிறார்கள். ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது . இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது" என்றார்.
சசிகலா
முன்னதாக துக்ளக் விழாவில் பேசி அதன் ஆசிரியர் குருமூர்த்தி, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றோரையும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அவர் தெரிவித்த விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தீ பற்றி எரியும் போது கங்கை நீர் வரும் வரை காத்திருக்காமல், சாக்கடை நீரை கொண்டும் அணைக்க வேண்டும் என்று உவமை தெரிவித்தார்.
பொங்கல் விழா
இதனிடையே பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை மதுரவாயலில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டு புதுப்பானையில் அரிசி, வெல்லம் ஆகியவற்றை இட்டு பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தார். தொடர்ந்து பாஜகவின் கலாச்சார பிரவு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
பாஜகவில் இணைகிறார்கள்
அதனைத் தொடர்ந்து பேசிய ஜேபி நட்டா, "பாரதிய ஜனதா கட்சியிலும், ஆட்சியிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால் தான் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள், மாற்று கட்சியினர் தொடர்ந்து பாஜகவில் இணைகின்றனர். அவர்களை ஒன்றிணைத்து பணியாற்ற வேண்டும். எதிர்காலத்தில் பாஜக தமிழகத்தில் மிக முக்கிய கட்சியாக மாறும்" என்றார்.