பழனியில் "மலர்ந்த" தாமரை.. பஸ் ஸ்டாண்ட்டை கலக்கும் மூக்கம்மாள்!
பழனி பஸ் ஸ்டேண்டில் தாமரை இலைகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
சென்னை: பழனி பஸ் ஸ்டாண்டில் தாமரையை இலையை விரித்து வைத்து வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார் மூக்கம்மாள்!!
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக இவற்றுக்கு மாற்றாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், மூங்கிள் பொருட்கள், மண் குவளைகள் என பல்வேறு பொருட்களை பயன்படுத்தலாம் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பனை ஓலை பெட்டி
இதனை பெரிய பெரிய கடைகள் பின்பற்றுகிறதோ இல்லையோ, பெட்டிக்கடை, நடைபாதை வியாபாரிகள்தான் முழுமையாக மதித்து, தீவிரம் காட்ட தொடங்கிவிட்டனர். நெல்லை ஸ்வீட் ஸ்டால் ஒன்றில் பனை ஓலை பெட்டிகளில் மூடிகளுடன் ஸ்வீட்கள் பார்சல் ஆகி கொண்டிருக்கின்றன. அதேபோல இறைச்சிகளையும் வாழை, ஓலை பெட்டிகளில் வைத்து கடைக்காரர்கள் தருகிறார்கள்.
இரட்டிப்பு லாபம்
இப்படி பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒன்றுதான் தாமரை இலையும். அனைத்து உணவு பொருட்களையும் இதில் வைத்து சுருட்டி தரலாம். பொதுவாக தாமரை இலை நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. அதில் சுட சுட உணவு பொருளும் சேர்த்து சாப்பிடும்போது, லாபம் டபுளாக நமக்கு கிடைக்கிறது.
மலர்ந்த தாமரை
இந்த தாமரை இலையைதான் மூக்கம்மாள் விற்க தொடங்கி உள்ளார். பழனி பஸ் ஸ்டாண்டின் ஒரு ஓரத்தில் எல்லோரும் பார்க்கும்படி வாழை இலைகளை விரித்து போட்டு வியாபாரத்தில் இறங்கி இருக்கிறார். பிளாஸ்டிக்கின் கெடுதல் மூக்கம்மாளுக்கு தெரிகிறதோ இல்லையோ, தாமரை இலையின் பயன்கள் நிறையவே தெரிந்திருக்கும்.
மூக்கம்மாள் வாழ்வு
பிளாஸ்டிக்கை தடை செய்துவிட்டதால், வாழை, பனை, தாமரை, தென்னைகள் மூலம் எத்தனையோ குடிசைவாசிகள், நடைபாதைவாசிகளுக்கு மாற்று தொழில் கிடைத்து விட்டது. தாமரை இலையில் நீர் ஒட்டினால் என்ன, ஒட்டாவிட்டால் நமக்கு என்ன கவலை? இனி மூக்கம்மாள் வாழ்க்கையில் தாமரை இலைகள் நன்றாகவே ஒட்டிக் கொண்டுவிட்டது.