நகரவே இல்லை.. குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது புரவி புயல்.. கனமழை வார்னிங்
சென்னை: புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த நிலையில் இப்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது, இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாளைக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரேவி புயலாக உருவெடுத்தது. இலங்கைக்கு கிழக்கே மையம் கொண்டிருந்த புரேவி புயல் இரு தினங்களுக்கு முன்பு இலங்கையில் திரிகோணமலை பகுதியை தாக்கி கரையை கடந்தது தமிழகம் நோக்கி மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது.
இதன் காரணமாக கடலூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடலூரில் மிகமிக அதிக கனமழை பெய்தது.மொத்த கடலூர் மாவட்டமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
அதே இடத்தில் நீடிக்கிறது
தமிழகத்தில் பாம்பன் கன்னியாகுமரி இடையே புரேவி புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியது.. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நேற்று முழுவதும் அதே இடத்தில் இதே நிலையில் நீடித்து வந்தது.
கனமழை
நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு கேரள பகுதியை நோக்கி நகரும் என்று கூறப்பட்டது. ஆனால் பல மணி நேரமாக அதே இடத்தில் நங்கூரம் போட்டு நின்று வந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக்கடலில் வலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரத்தில் இருந்து தென் மேற்கே 40 கி.மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து தென்மேற்கே 70 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
நீரில் பயிர்கள்
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூர், நாகப் பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை ,மயிலாடுதுறை ,விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம், மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.