அரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது
Recommended Video
சென்னை: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது.. வங்கக்கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்றி ஏற்பட்டுள்ளது. 2 கடலிலும் இந்த நிலை உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாளைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் 7 மாவட்டங்களிலும் கனமழை கொட்ட போகிறது என்ற அறிவிப்பும் வந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை, 2 நாளைக்கு முன்பு துவங்கியது. இதனால் வங்க கடலில், வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டதால், வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டியது.
அதிலும் எப்பவுமே பெய்யாத சென்னையில்கூட, பேய் மழை அடித்து ஓய்ந்தது. அதுபோன்றே இப்போது, இன்னும் 7 மாவட்டங்களலும், கன மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரு நிகழ்வுகள்
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாம். அதேபோல, வங்கக் கடலில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாம். இந்த இரு நிகழ்வுகளால், தமிழகம், புதுச்சேரியில் நல்ல மழை பெய்ய போகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில், மழை கொட்டி தள்ள போகிறதாம். இதைதவிர, வேறு இடங்களிலும் லேசான மழை இருக்கும் என்கிறார்கள்.
7 மாவட்டங்கள்
இந்த 7 மாவட்ட மழை என்பது இன்றைய நிலவரம்தான். ஆனால், வரும் 21, 22ம் தேதிகளில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய மழை இருக்கிறது. இதைபற்றி சென்னை வானிலை நிலையம் தெரிவிக்கும்போது, "வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வழக்கமாக அக்டோபர், 1 முதல், இதுவரை சராசரியாக, 9 செ.மீ., மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 8 செ.மீ., மழை பெய்துள்ளது" என்கிறது.
ஈடு செய்யுமா?
அப்படியானால் இதுவரை பெய்திருக்கும் மழை போதவில்லை என்பதுதான் தெரிகிறது. எனவே இன்று 7 மாவட்ட மழை மற்றும் 21, 22 தேதிகளின் மழை இதை ஈடு செய்யுமா என்பதை பார்க்க வேண்டும்.
வங்கக்கடல்
அதேபோல, தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம், அரபிக்கடல், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழகத்துக்கு நல்ல நீர்வளத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.