அந்தமான் அருகே.. புதிய புயல் சின்னம் வர போகிறது.. நல்ல மழைக்கு பிரகாசமான வாய்ப்பு!
அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது
சென்னை: இன்னொரு புயல் நாளைக்கு வரப்போகிறதாம்.. அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது.. இதனால் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. 2 நாளைக்கு முன்பு அரபிக்கடலில் இரண்டு புயல்கள் உருவானது.
இதனால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பலத்த மழை மட்டுமே கிடைத்தன. இப்போது, கியா, மகா ரெண்டு புயல்களும் பெரிதாக கை கொடுக்காதபோது, இன்னொரு புயலும் வங்கக்கடலில் உருவாக போகிறதாம்.
சாலையில் தேங்கிய மழைநீர்... நிர்மலாவை டென்ஷனாக்கிய மாநகராட்சி நிர்வாகம்
தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் குறிப்பாக அந்தமான் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணிப்பு
ஆனால், தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நகர்வதை பொறுத்துதான், மழை பற்றின நிலவரம் கணிக்க முடியும் என்றும், அதன் சாதக பாதகங்களை தீர்மானிக்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆய்வு மையம்
எனினும் கிழக்கில் இருந்து வீசிய கடல் காற்று காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னைக்கும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஒரு அறிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மிதமான மழை
அதில், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்கள்
நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அதேபோல, மகா புயல் தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும், இருந்தாலும், புயல் காரணமாக அரபிக்கடல் பகுதிக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.