வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தம்...3 நாட்களுக்கு கனமழை - சூறாவளியும் வீசும்
வங்கக்கடலில் அந்தமானை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தை நோக்கி வரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிவர் புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்பின் ஈரம் கூட இன்னமும் காயவில்லை. அதற்குள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 2வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரைக்கும் சூறாவளி காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புரேவிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம்.. சென்னை- புதுவை இடையே.. பாத்து சூதானமா வாங்க சாமி!
மூன்று நாட்களுக்கு மழை
நவம்பர் 28 மற்றும் நவம்பர் 29 தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நவம்பர் 30 அன்று தமிழகம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
மிக கனமழை
டிசம்பர் 1 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
சூறாவளி வீசும்
நவம்பர் 29 அன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 30 அன்று தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மணிக்கு 70 கிமீ வேகத்தில் சூறாவளி
டிசம்பர் 1 தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 2 அன்று தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாப் பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்டப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடல் பகுதிக்கு வரும் 2ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகம் தயாரா
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது நிவர் புயலின் புண்ணியால் கனமழை கொட்டித்தீர்த்தது. வறண்டு கிடந்த ஆறுகள் எல்லாம் உயிர் பெற்று ஓடுகின்றன. திருவள்ளூர் தொடங்கி வட கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது வேலூர், திருவண்ணாமலையிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளை மூழ்க்கடித்துள்ளது. நிவர் ஏற்படுத்திய பாதிப்பு மறையும் முன்பே இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் ஏற்படும் மழை வெள்ளத்தை தமிழகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.