தென் அந்தமான் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: தென் அந்தமான் அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது; காற்றழுத்த தாழ்வுமண்டலமாக இது வலுப்பெற்று டிச.2-ல் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நேற்று தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதி மற்றும் இந்திய பெருங்கடலை ஒட்டிய மத்திய ரேகை பகுதியில் நிலை கொண்டுள்ளது..
தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்
டிச 2-ல் தென் தமிழகம்
அடுத்த 36 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் இது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர் டிசம்பர் 2-ந் தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி இது நகரக் கூடும். 29,30 ஆகிய நாட்களில் தமிழகம், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தென் தமிழகத்தில் மழை
டிசம்பர் 1-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 2-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களி அதி கனமழையும் தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
இடிமின்னல் மழை
டிசம்பர் 3-ந் தேதியன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். அடுத்த 48 மணிநேரத்துக்கு சென்னை, புறநகர் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.