மத்தியஸ்தரை நியமித்த ஐகோர்ட்.. எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் - தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க, சென்னை உயர்நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமித்துள்ளது. இதனையடுத்து டேங்கர் லாரிகள் இன்று துவக்கிய ஸ்டிரைக் வாபஸ் ஆகியுள்ளது
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பால் வசந்தகுமாரை சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக நியமித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஆதிகேசவலு பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்தார்.
முன்னதாக இன்று காலை திட்டமிட்டு அறிவித்தபடி தென்மாநிலங்களில் இன்று முதல் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் துவங்கியது. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 4,800 எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் பங்கேற்றன. நாமக்கல் பகுதியை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் உள்ள எல்பிஜி டேங்கர் லாரிகள், பொதுத்துறை ஆயில் நிறுவனங்களிலிருந்து எரிவாயு சிலிண்டரில் வாயு நிரப்பும் மையங்களுக்கு, சமையல் கியாசை கொண்டு செல்லும் பணியை செய்து வருகின்றன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுவை தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மொத்தம் 5,540 லாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4, 800 எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே மீண்டும் வணிக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விடுபட்ட 740 லாரிகளுக்கும் வணிக ஒப்பந்தம் தர வலியுறுத்தியே, இன்று முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 31-ல் பழைய டெண்டர் ஒப்பந்தம் முடிந்த நிலையில், புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 740 டேங்கர் லாரிகளுக்கு வேலையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக கூறியிருந்தனர். ஜூலை 1 (இன்று) முதல் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா,புதுவை மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம் என அறிவித்தனர்.
தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தபடி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர். டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியதால், தென்னிந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பேராட்டம் 3 நாட்கள் தொடரும்பட்சத்தில், சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது.
இதனிடையே டேங்கர் லாரி உரிமையளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அத்தியாவசிய சேவை சட்டப்படி வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிக்கலின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
இவ்வழக்கை விசாரித்த இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து - தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் ஸ்டிரைக் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.