திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே - மனுதர்மம் விவகாரத்தில் வைரமுத்து ஆதரவு
சென்னை: மனுதர்மம் பெண்களை இழிவுபடுத்துகிறது என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் பேசிய திருமாவளவன், மனுதர்மம் எப்படி எல்லாம் பெண்களை இழிவுபடுத்துகிறது என விவரித்தார். மேலும் இந்து பெண்கள் அனைவரையுமே மனுதர்மம் விபச்சாரிகள் என சொல்வதாகவும் திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த கருத்தரங்கம் முடிவடைந்து 1 மாதம் கழித்து திருமாவளவன், பெண்களை விபச்சாரிகள் என பேசிவிட்டதாக வழக்கம் போல வெட்டி ஒட்டிய வீடியோ வைரலாக்கப்பட்டது. இது தொடர்பாக திருமாவளவனும் விளக்கம் அளித்திருந்தார்.
பின்னர் பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடை செய்யக் கோரி போராட்டமும் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் இந்த போராட்டத்தை நடத்தினர். இதில் பல்வேறு இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். சில இடங்களில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது.
ஆனாலும் தமிழக பாஜகவினர் திருமாவளவனை கைது செய்தே ஆக வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடத்த சென்ற பாஜக நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திருமாவளவனுக்கு கவிஞர் வைரமுத்து ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
திருமா வளவன் தீட்டிய அரிவாள்
தென்னவர் சுழற்றியதே - அவன்
அரிமா போலே ஆர்த்த கருத்தும்
அரிவையர் வாழ்வதற்கே - அதை
அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது
அரசியல் செய்வதற்கே - நாம்
நெறியின் வழியே நீண்டு நடப்பது
நீதி நிலைப்பதற்கே
என குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.