போதும்! 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ் வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. தமிழக அரசும் மாநில அரசுக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழரையும் விடுவிக்கும் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பியது.
இந்த பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனைக் கண்டித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
உச்சநீதிமன்றத்திலும் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு வார காலத்தில் ஆளுநர் பன்வாரிலால் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இதனிடையே கவிப்பேரரசு வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி பதிவிட்டுள்ளதாவது:
போதும்!
29ஆண்டுகள் சிறைவாசம் போதும்.
எழுவர் விடுதலையைத்தான்
மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது.
ஆளுநரின் அதிகாரம்
அறத்தை முன்னிறுத்திச்
சட்டத்தை அணுகட்டும்.
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.