தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
சென்னை: தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதற்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையாகும். இந்த திட்டம் அனைத்து தரப்பு மக்களால் வரவேற்கப்படுகிறது.
சபாஷ்.. 5 அதிரடி உத்தரவுகளில் ஸ்டாலின் கையெழுத்து.. அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இம்மாதமே ரூ.2000
கொரோனாவுக்கு சிகிச்சை
ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை நடந்து வருவதாக கடந்த அதிமுக ஆட்சியிலேயே புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
கட்டணங்கள்
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். நேற்று முன் தினமும் கமல்ஹாசன் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
உயிரை காப்பாற்ற
அதில் எவ்வளவு பணம் செலவு செய்தாவது உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என நோயாளிகள், உறவினர்களின் மனநிலையை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளன. எனவே புதிதாக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
முதல் நாளே அதிரடி
மேலும் ஸ்டாலினும் வெற்றி பெற்ற நாள் முதல் கொரோனாவை குறைக்கவும் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்கவும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தார். அதன் ஒருபகுதியாக தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் , இதற்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.