ஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைநீர் சேமிப்பு முறையை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், தேர்தல் வராமல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறியது பற்றி கருத்து கூறிய அவர், மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்கள் முடிந்த பிறகே ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை; இப்போது எப்படி ஏற்படும்? என்றார்.
முன்னதாக, ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.. தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்று விட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது?... தமிழிசை கேள்வி
மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்கு போராடுவதா? என்று கேள்வி எழுப்பி உள்ள தமிழிசை சௌந்தரராஜன், இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.