நல்லா இருக்கீங்களா.. நலம் விசாரித்த ஸ்டாலின்.. சிரித்த கே.எஸ் அழகிரி.. திமுக கூட்டத்தில் லாலாலாலா!
திமுக சார்பாக இன்று சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
சென்னை: திமுக சார்பாக இன்று சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் - திமுக கூட்டணியில் லேசான விரிசல் ஏற்பட்டது. மாறி மாறி திமுக - காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டு வந்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டார்.
சண்டை காரணம்
இதுதான் சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டது. இதற்கு துரைமுருகன் காட்டமாக பதில் சொன்னார். அதன்பின் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களும் பதில் சொல்ல சண்டை பெரிதானது. அதன்பிறகு கே.எஸ் அழகிரி இந்த சண்டை தொடர்பாக 3 அறிக்கைகள் வெளியிட்டு அமைதியாக சென்றார். திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த சண்டையை நிறுத்த வேண்டும். மேலும் இதை பொதுவில் விவாதிக்க கூடாது என்று குறிப்பிட்டார்.
இன்று நடந்தது
இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டது. மற்ற கூட்டணி கட்சிகளும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
பேசினார்கள்
இந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் கே.எஸ் அழகிரியும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொண்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் குறித்து இவர்கள் ஆலோசித்தனர். வரிசையாக பல்வேறு தலைவர்கள் கூறிய கருத்து குறித்தும் இவர்கள் பேசிக்கொண்டனர். இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மனஸ்தாபத்தை தீர்க்கும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் இருந்ததாக திமுகவினர் கூறுகிறார்கள்.
துரைமுருகன் பேசினார்
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் துரைமுருகனும் இருந்தார். ஆலோசனை முடிந்த பின் கே.எஸ் அழகிரியிடம் பேசினார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினால், வெளியேறட்டும் என்று கடுமையான விமர்சனம் செய்தவர்தான் துரைமுருகன். இந்த நிலையில் அவர் இன்று கே.எஸ் அழகிரி உடன் பேசினார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்து ஆலோசனை செய்தனர்.
இரண்டு கட்சிகள்
வெளியே இருந்த இரண்டு கட்சி தொண்டர்களும் கூட, இது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். இதனால் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் இந்த அனைத்து கட்சி முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கட்சிக்கும் இடையில் இது மீண்டும் நெருக்கத்தை உண்டாக்கும். தலைவர்கள் தேவையில்லாமல் பேசியது எல்லாம் மறந்து போகும் என்று கூறுகிறார்கள்.