திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வேண்டாம்..! மு.க.ஸ்டாலின் கறார் உத்தரவு
Recommended Video
சென்னை: திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்களோ, ப்ளக்ஸ் போர்டுகளோ வைக்கக்கூடாது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கறாராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவினரின் பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியிருக்கிறார். திமுக நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் பேனர்கள், கட்-அவுட்கள், வைக்க வேண்டாம் என, ஏற்கனவே தாம் பலமுறை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதை மீண்டும் நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை...துரைமுருகன் விளாசல்
சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு பேரிடர் ஏற்படும் வகையில் பேனர் வைப்பதை தம்மால் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது என்றும், அதனை கட்சியினர் அறவே நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமது அறிவுறுத்தலை மீறி கட்சியினர் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், தனது அறிவுறுத்தல் மீறப்பட்ட தகவல் அறிந்தால் தாம் பங்கேற்கும் நிகழ்சியாகவே இருந்தாலும் கூட அதில் பங்கேற்கமாட்டேன் என தெளிவுபடுத்தியுள்ளார்.
ஊராட்சி, ஒன்றிய, பேரூர், வட்டக் கழக, மாவட்ட கழக நிர்வாகிகள் தனது அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திமுக கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலை நாட்டிட முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.