''மயானங்களில் பணிபுரிபவர்கள் இனி முன்கள பணியாளர்களே''.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அசத்தல் அறிவிப்பு!
சென்னை:மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஆக்சிஜன் வசதியுடன் 1,000 படுக்கைகள்:என்எல்சியிடம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான குழு வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,000-க்கு அதிகமான பாதிப்புகளும், 303 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
மகத்தான பணி
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்கள பணியாளர்களின் பங்கு அளப்பரியது. மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகத்துறையை சார்ந்தவர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்ட்டனர்.
சூப்பர் அறிவிப்பு
இந்த நிலையில் மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்கள பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- மயான பணியாளர்களும் இனி முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர்.
முதல்வரிடம் தெரிவிக்கப்படும்
மயான பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் வழங்கும். மயான ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மயானங்களில் தகனம் செய்ய உடல்கள் அதிகமாக வருகிறது.
சலுகைகள் கிடைக்கும்
பல்வேறு மயானங்களில் உடல்கள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கடமையே கண்ணாக கொண்டு இரவு பகல் பாராமல் மயான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்கள பணியாளர்களுக்கான சலுகைகள் இவர்களுக்கும் கிடைக்கும்.