பார்ரா.. இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்கா.. மெக்காலேவை இதற்காகவே பாராட்டலாம்!
மெக்காலேவின் கல்வி கொள்கையை நம்மால் மறக்க முடியாது
Recommended Video
சென்னை: இது எதேச்சையானதுதான்.. ஆனால் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். தமிழகத்திற்கும் இந்தித் திணிப்புக்கும் அப்படி ஒரு ஏழாம் பொருத்தம். இந்த நிலையில் நமக்கு நினைவில் வரும் முதல் நபர் லார்ட் மெக்காலேதான்.
ஏன் மெக்காலே நினைவுக்கு வர வேண்டும். நிச்சயம் இவர்தான் நினைவுக்கு வர வேண்டும். காரணம் தமிழுக்கும், இந்தியாவின் இதர மொழிகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக இன்று வரை விளங்குவது ஆங்கிலம்தான்.
அந்த ஆங்கிலத்தை இந்தியாவின் இணைப்பு மொழியாக மாற்றிய வெள்ளைக்கார அதிகாரிதான் இந்த மெக்காலே. மெக்காலேதான் இந்தியாவின் கல்வித் திட்டத்தை உருவாக்கியவரும் கூட. இன்று வரை அதற்காக அவரை நாம் திட்டிக் கொண்டுதான் உள்ளோம்.
இணைப்பு மொழி
ஆனால் இதே மெக்காலேதான் பரந்து விரிந்த பாரத தேசத்தை ஒருங்கிணைக்க ஆங்கிலம்தான் சரியான இணைப்பு மொழி என்று கூறியவர். இன்று வரை இந்தியாவை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பது மெக்காலே கொண்டு வந்த திட்டம்தான்.
சமஸ்கிருதம்
இப்படி ஒரு விஷயத்தை மெக்காலே அன்று ஏன் கொண்டு வந்தார் தெரியுமா? "ஆங்கிலத்தில் தான் கலை, அறிவியல், வரலாறு எல்லா துறை சம்பந்தப்பட்ட அதிக அளவு புத்தகம் இருக்கிறது. இது சமஸ்கிருதத்தில் ரொம்பவும் குறைவாக உள்ளது. அது மட்டும் இல்லை, அறிவியல் சார்ந்த கல்விக்காக பணத்தை செலவு செய்வதை விட்டுவிட்டு, மத போதனைகளை மட்டும் கற்றுத் தரும் இந்திய பாரம்பரிய ரீதியான கல்விக்கு செலவிடுவது வீண்" என்பதுதான் அவரது உறுதியான கருத்து.
புதிய கல்விமுறை
இதனால்தான், இந்தியர்களின் அறிவுத் திறனை வளர்க்க புதிய கல்விமுறையை அவர் கொண்டு வந்தார். உலகில் உள்ள எல்லாவற்றையும் இந்தியர்கள் கற்று கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இவரது ஆழமான நோக்கம். ஆனால் நம்ம ஆட்கள் அன்று சொன்னார்கள் தெரியுமா? "இந்தியர்களை மொழி பெயர்ப்பாளர்களாக உருவாக்கி அதன்மூலம் சிந்தனை ரீதியான அடிமைகளாக உருவாக்க நினைக்கிறார்" என்று மெக்காலேவை விமர்சித்தார்கள்.
இந்தி திணிப்பு
இதில் பாதி உண்மைதான். ஆனால், இந்தித் திணிப்புடன் ஒப்பிடும்போது ஆங்கிலம்தான் இந்தியாவை உண்மையிலேயே ஒருங்கிணைத்திருப்பதை உணர முடிகிறது. அவ்வப்போது இந்தி திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுவது வழக்கம். அப்போதெல்லாம் இந்த மெக்காலேதான் நினைவுக்கு வருவார். இப்போதும் கூட அவர்தான் நினைவுக்கு வந்துள்ளார்.
இந்தித் திணிப்பு
மெக்காலே இப்படி ஒரு கல்வித் திட்டத்தை கொண்டு வந்ததின் பலன்கள் ஏராளமானவை. ஆங்கில அறிவின் மூலம் இன்று ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உலகின் பல நாடுகளின் மூலைமுடுக்குகளில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அது மட்டும் இல்லை, சமஸ்கிருத, ஹிந்தி வழிக் கல்வியை தடுத்து நிறுத்தியதன் விளைவாக பிராந்திய மொழியின் தொடக்க கல்வியை எளிதாக அறிமுகப்படுத்தவும் மிக முக்கிய காரணமாகவும் இருந்தை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
சமாதிதான்
ஒருவேளை மெக்காலே சமஸ்கிருத வழிகல்வியை அறிமுகப்படுத்தி இருந்தால் என்ன ஆகி இருக்கும் தெரியுமா? இந்திய தேசியவாதத்தை காரணம் காட்டி, பிற பிராந்திய மொழி கல்வி வளர்ச்சிக்கு முழுமையாக ஒட்டுமொத்தமாக நம்ம ஆட்கள் சமாதி கட்டி இருப்பார்கள்.
பாராட்டலாம்
ஆங்கிலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வராமல் இந்தியையோ அல்லது சமஸ்கிருதத்தையோ ஊக்குவித்திருந்தால் இன்று இந்தியா முழுமையும் சமஸ்கிருத மயமாகவோ அல்லது இந்தி மயமாகவோ மாறிப் போயிருக்கும். அந்த வகையில் இந்தி தெரியாத பிற மாநிலங்களைக் காத்தவர் என்று கூட மெக்காலேவை மனசார சொல்லலாம்.