"கூரை ஏறி முடியாதவர் வைகுண்டம் போவாராம்".. திரௌபதி முர்மு ஊரில் மின்சாரமே இல்லை.. வாசுகி விளாசல்
சென்னை: குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்தில் மின்சார வசதி கூட செய்து தரப்படாததை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தல் 2022: முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் திரௌபதி முர்மு! என்ன செய்ய போகிறார்?
முர்மு யார்?
பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்முவின் சொந்த கிராமமான உப்பர்பேடா ஒடிசா மாநிலத்தில் ராய்ரங்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு போன மாதம் வரை மின்சார வசதி கூட இல்லை. மாவட்ட தலைநகரில் இருந்து வெறும் 20 கிமீ தொலைவில் இருந்தும் கூட இந்த கிராமத்திற்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை. அதேபோல் இங்கு சரியான சாலையும் இல்லை. செம்மண் சாலைதான் போடப்பட்டுள்ளது. இந்த கிராமமே மிக மோசமான நிலையில் உள்ளது.
மின்சாரம் இல்லை
தமிழ்நாட்டில் கிராமங்கள் 70களில் இருந்ததை விட பின்தங்கிய நிலையில் இந்த ஒடிசா கிராமம் உள்ளது. இங்கு பெரும்பாலும் இருக்கும் வீடுகள் ஓடுகள் கூட இல்லாத குடிசை வீடுகள். மண் பூசப்பட்ட வீடுகள் ஆகும்., சாலை முழுக்க பல இடங்களில் தண்ணீர் தேங்கி மோசமான நிலையில்தான் இங்கு இருக்கும் வீடுகள் காட்சி அளிக்கின்றன. இங்கு உள்ள மக்களின் வாழ்க்கை தரமும் இன்னும் உயரவில்லை. பலர் இப்போது கூலி வேலைதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம்
இந்த நிலையில் திரௌபதி முர்முவின் செயல் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். திரௌபதி முர்மு 2 முறை எம்.எல்.ஏவாகவும், 1 முறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். அப்படி இருந்தும் கூட அவர் தனது சொந்த கிராமத்தை கூட கவனிக்கவில்லை. கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களை கூட அவர் பாதுகாக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவில்லை என்று பலர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.
Recommended Video
வாசுகி விமர்சனம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், மாதர் சங்கத்தின் தேசிய துணை தலைவருமான வாசுகி இது குறித்து கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார். அதில், திரவுபதி முர்மு அவர்களின் சொந்த ஊருக்கு இப்போதுதான் மின்சாரம் வரப் போகிறதாம். ஏற்கனவே கவுன்சிலர், எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர், தற்போது பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர்... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாராம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.