அட.. ஜெ. எப்பங்க 1.5 கோடி ரூபாய்க்கு சாப்பிட்டாங்க.. மதுசூதனன் அப்படியே ஷாக் ஆயிட்டாரே!
சசிகலா குடும்பத்தை பற்றி மதுசூதனன் காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா உணவுக்கான செலவு ரூ. 1.5 கோடி என்பது அபத்தமானது என்றும் சசிகலா குடும்பத்தினர்தான் சாப்பிட்டு இருப்பார்கள் என்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி கமிஷனிடம் அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சையின்போது சாப்பிட்டதற்கான பில் தொகையை சமர்ப்பித்தது.
இந்த பில் தொகையை பார்த்து இந்திய மக்களே அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு நோயாளி இவ்வளவு ரூபாய்க்கு சாப்பிட்டிருக்க முடியுமா என்ற ஆதங்கத்தை மீம்ஸ்களை போட்டு வெளிப்படுத்தினார்கள்.
வாய் திறக்கவில்லை
இந்த செய்தி வெளிவந்து 4 நாளுக்கும் மேல் ஆன நிலையில் இதை பற்றி ஆளும் தரப்பு உட்பட யாருமே வாய் திறந்து கருத்து சொல்லவில்லை. இந்த நிலையில் முதன்முதலாக அதிமுக தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் இது சம்பந்தமாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அன்னதானம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாசர்பாடியில் நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியை மதுசூதனன் துவங்கி வைத்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:
சாப்பிடவே இல்லை
அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் உணவுக்கான செலவு ரூ.ஒன்றரை கோடி என்பது அபத்தமானது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு அவர் உணவு சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள்.
ஆஸ்பத்திரிக்கு போனேன்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் நான் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன். நான் கட்சியின் அவைத் தலைவர். ஆனால் என்னையே ஒரு தடவை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவே இல்லை. ஜெயலலிதாவின் ஆத்மா இல்லத்தில் இருக்கிறது. அதனால், அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்" என்றார்.
முக்கியமான கருத்து
கட்சியின் மூத்த தலைவர் மட்டுமல்லாது, அவைத்தலைவருமான மதுசூதனனின் இந்த கருத்து மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தற்போது நிறையவே வேலை வந்துள்ளது.