கேட்டுக்கொள்கிறேன் அல்ல... கேட்டுக்கொள்கிறோம்... மதுசூதணனுக்கு பாடம் எடுத்த ஓ.பி.எஸ்..!
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவை போற்றும் விதமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னையில் காலை முதலே மழை பெய்து வந்ததால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கால தாமதமாக நடைபெற்றது.
அனைத்து அமைச்சர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதா நினைவு தினம் அதிமுகவினர் அஞ்சலி - 6 மணிக்கு விளக்கேற்ற ஓபிஎஸ் ஈபிஎஸ் அழைப்பு
4-ம் ஆண்டு நினைவு தினம்
ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி மெரீனாவில் உள்ள அவரது நினைவிடம் நேற்றிரவே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. காலை 9 மணியளவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் திட்டமிட்டப்படி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த செல்ல முடியாத சூழல் உருவாகியது.
கால தாமதம்
இதையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் அவரவர் வீடுகளில் ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியதாக செய்தித் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இதனிடையே 10.30 மணிக்கு மேல் மழை சற்று குறைந்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அங்கு புறப்பட்டனர்.
மூன்று பேர் மட்டும்
அனைவரும் கருப்புச் சட்டை அணிந்தவாறு அங்கு வந்திருந்தனர். பொன்னையன், தளவாய் சுந்தரம், ராஜேந்திர பாலாஜி, ஆகிய மூன்று பேர் மட்டும் எப்போதும் போல் வெள்ளைச் சட்டை அணிந்து வந்திருந்தனர். வந்தவர்கள் அனைவரும் மழை பிடித்துக்கொள்வதற்கு முன்பாக அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.
ஒ.பி.எஸ். வாசிப்பு
இதையடுத்து அந்த நிகழ்வு முடிந்த பின்னர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தலைமை தாங்கி வாசிக்கத் தொடங்கிய ஓ.பி.எஸ். அதிமுகவை கட்டிக்காப்போம் எனக் கூற அதனை அங்கிருந்தவர்கள் பின் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மதுசூதணன்
பின்னர் எல்லோரும் கலைந்து செல்வதற்கு முன்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதணன் கூற, அருகில் நின்றுகொண்டிருந்த ஓ.பி.எஸ். கேட்டுக்கொள்கிறேன் அல்ல கேட்டுக்கொள்கிறோம் என அவருக்கு பாடம் எடுத்தார்.